கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை!
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்...
கேரளத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் (வயது 101) மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், மருத்துவமனை இன்று (ஜூலை 4) வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை எனவும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், சிறப்பு மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய மூத்த தலைவர்களுள் ஒருவரான வி.எஸ். அச்சுதானந்தன் கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.