கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தேஜஸ்வி யாதவ்!
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் வந்த கார் விபத்தில் சிக்கியது..
பிகாரின் வைஷாலி மாவட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் வந்த கார் விபத்தில் சிக்கியதில் பாதுகாப்புப் பணியாளர்கள் மூவர் காயமடைந்தனர். ஆனால் தேஜஸ்வி யாதவ் காயமின்றி உயிர்த் தப்பினார்.
இதுதொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கோரால் அருகே பாட்னா-முசாபர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தேஜஷ்வி யாதவுடன் வந்த வாகனங்கள் தேநீர் இடைவேளைக்காக நள்ளிரவு 12.30 மணியளவில் ஓரிடத்தில் நிறுத்தினர். அப்போது எதிரே வந்த லாரி இரண்டு கார்கள் மீது வேகமாக மோதியது.
தேஜஸ்வி யாதவ் சென்ற காரின் மீது லாரி மோதாததால் அதிர்ஷ்டவசமாக யாதவ் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்தில் அவருடன் வந்த மூன்று பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர்.
யாதவ் மாதேபுராவில் இருந்து பாட்னாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக அதிகாரி கூறினார். காயமடைந்த மூன்று பாதுகாப்புப் பணியாளர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாதவ் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த பணியாளர்களின் நிலை குறித்து விசாரித்தார்.
மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய யாதவ்,
நாங்கள் மாதேபுராவிலிருந்து பாட்னாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. கோரால்வ் அருகே தேநீர் இடைவேளைக்காக நாங்கள் நின்றிருந்தோம். வேகமாக வந்த லாரி எனது வாகனத் தொடரணியின் இரண்டு வாகனங்கள் மீது மோதியதில், மூன்று பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர்.
நான் உடனடியாக மாவட்ட காவல்துறை மற்றும் நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தேன். விபத்து எனது வாகனத்திலிருந்து ஐந்து அடி தொலைவில் நடந்தது.
போலீசார் லாரி ஓட்டுநரைக் கைது செய்து வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாதவ் கூறினார்.