அமெரிக்காவில் கைவிலங்கிட்டு நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர் சட்டவிரோதமாக நுழைந்தவர்!
அமெரிக்காவில் கைவிலங்கிட்டு நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர் பற்றி...
அமெரிக்காவின் நேவார்க் விமான நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டு நாடுகடத்தப்பட்ட இந்திய மாணவர் முறையான விசா இல்லாமல் சட்டவிரோதமாக நுழைந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய - அமெரிக்க சமூக தொழில்முனைவோரான குணால் ஜெயின் என்பவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட விடியோவில், ஹரியாணைவைச் சேர்ந்த மாணவர் ஒருவரை அமெரிக்க போலீசார் கைது செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இந்திய மாணவரை தரையில் மண்டியிட வைத்து அவருடைய கைகளில் விலங்கு போடப்பட்டதாகவும், கதறி அழுத அந்த மாணவனை ஒரு குற்றவாளி போன்று நடத்தியதாகவும் குணால் ஜெயின் தெரிவித்திருந்தார்.
Advertisement
இந்த காணொலி இணையத்தில் வைரலாகி இந்திய மாணவரை அமெரிக்கா மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாக கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், இந்திய மாணவர் முறையான விசா இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்ததால் நீதிமன்ற உத்தரவின்படி நாடுகடத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய துணை தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த மாணவரின் நடத்தை பயணத்துக்கு உகந்ததல்ல என்று நியூவேர்க் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த இளைஞர் பயணத்துக்கு தகுதியானவர் என்று சான்றிதழ் கிடைத்தவுடன் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எந்த சம்பவத்தையும் குறிப்பிடாமல் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம்,
“அமெரிக்காவுக்குள் சட்டப்பூர்வமாக பயணிப்போரை வரவேற்கிறோம். சட்டவிரோத பயணம் அல்லது விசாவில் முறைகேடு செய்து பயணிப்பது அமெரிக்க சட்டத்தை மீறுவதாகும். அதனை பொறுத்துக்கொள்ள மாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.