குஜராத் விமான விபத்து! முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!
குஜராத் விமான விபத்தில் அம்மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்
குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பலியானதாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
ரூபானி சென்ற விமானம் விபத்து அறிந்ததையடுத்து, ராஜ்கோட்டில் உள்ள ரூபானியின் வீட்டின் முன்னே அவரது உறவினர்கள் கூடியுள்ளனர்.
விஜய் ரூபானி உயிரிழந்த தகவலை பாஜக தலைவர் சி.ஆர். படேல் உறுதி செய்தார்.
யார் இந்த விஜய் ரூபானி?
மியான்மரில் 1956, ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் பிறந்த விஜய் ரூபானி, 1996 - 97 ராஜ்கோட் மேயராகவும், 2006 -12 வரையில் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2016 - 2021 வரையில் குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார்.
பாஜகவின் மூத்தத் தலைவரான ரூபானி, குஜராத் போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் நீர்வழங்கல் துறைகளிலும் அமைச்சராக பதவி வகித்தவர்.
குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171 (போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்தது) புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்ததாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
விமானம் விபத்துக்குள்ளான பகுதி அருகே இருந்த மாணவர்கள் விடுதியில் 15-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் இருந்ததாகவும், அவர்கள் நிலை என்ன ஆனது என்றும் அச்சத்தில் இருப்பதாக அம்மாநில செய்தி ஊடகங்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: 204 பேரின் உடல்கள் மீட்பு! யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஆமதாபாத் காவல் ஆணையர்