விமான விபத்து: டிஎன்ஏ சோதனைக்காக காத்திருக்கும் உறவுகள்! கண்ணீருடன்
விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களைப் பெற டிஎன்ஏ பரிசோதனைக்காக மருத்துவமனையில் உறவினர்கள் காத்திருக்கிறார்கள்.
சிலர், தரையைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள். அடிக்கடி செல்போனில், தங்களை துயரில் விட்டுச் சென்ற உறவைப் பார்த்தபடி கண்ணீர்சிந்தியபடி டிஎன்ஏ பரிசோதனைக்காகக் காத்திருக்கிறார்கள். டிஎன்ஏ பரிசோதனை முடிந்து, தங்களது உறவை இறுதியாக வீட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு அமர்ந்திருக்கிறார்கள்.
மறுபக்கம், அரசு மருத்துவமனையின் உடல்கூறாய்வு அறையில் தடய அறிவியல் துறையினர், தொடர்ச்சியாக இரவு பகல் பாராமல் உடல் கூறாய்வுகளை செய்தும், டிஎன்ஏ சோதனைக்காள ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
பலியான உடல்களிலிருந்து எடுக்கப்படும் டிஎன்ஏக்கள் பரிசோதனை செய்யப்பட்டு பட்டியலிடும் பணியும், மறுபக்கம் அவர்களது உறவினர்கள் அளிக்கும் டிஎன்ஏவுடன் எந்த டிஎன்ஏ ஒத்துப்போகிறது என்பதை சோதிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
டிஎன்ஏ முடிவுகளின் அடிப்படையில் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியும் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம்: நெதன்யாகு அழைப்பை நிராகரித்த புதின்!
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த உறவுகள், பிஜே மருத்துவக் கல்லூரியின் அரங்கில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்குள்ள மர நாற்காலிகளில் பேசுவதற்கு எதுவும் இன்றி கண்ணீர் மட்டுமே காயத்தை ஆற்றும் மருந்தாக நினைத்து பலரும் காத்திருக்கிறார்கள். இதுதான் உங்கள் உறவின் உடல் என்று மருத்துவமனை ஊழியரின் அழைப்புக்காகக் காத்திருக்கிறார்கள். இந்த அறை, உடல்கூறாய்வு அறைக்கு பக்கத்திலேயே அமைந்திருக்கிறது.
பலரும், இந்தியாவுக்கு வந்துவிட்டு, லண்டன் திரும்புபவர்களாகவும், சிலர், இந்தியாவிலிருந்து லண்டன் புறப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரிட்டன் நாட்டவர் முதல், தந்தை மரணத்துக்கு வந்தவர், மனைவியின் அஸ்தியைக் கரைக்க வந்தவர்கள் என பலியானவர்களின் பின்னணி பெருந்துயரங்களைத் தாங்கியிருக்கும் சோகக் கதையாக உள்ளது.