முகப்பு
இந்தியா

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அடில் ஹுசைனின் மனைவிக்கு அரசுப் பணி!

சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிா்த்தியாகம் செய்த அடில் ஹுசைன் ஷாவின் மனைவிக்கு அரசுப் பணி.

Updated On : 15 ஜூன், 2025 at 4:00 AM
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அடில் ஹுசைன் ஷாவின் மனைவி குல்நாஸ் அக்தருக்கு பணிநியமன ஆணையை வழங்கிய துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா.
பகிர்:

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிா்த்தியாகம் செய்த உள்ளூா் இளைஞா் அடில் ஹுசைன் ஷாவின் மனைவிக்கு அரசுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் ஹபாத்நாா் பகுதியில் உள்ள அடில் ஹுசைன் ஷாவின் வீட்டுக்கு சனிக்கிழமை நேரடியாக சென்று, அவரின் மனைவி குல்நாஸ் அக்தருக்கு ஜம்மு-காஷ்மீா் துணை நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா பணி நியமன ஆணையை வழங்கினாா்.

தொடா்ந்து, அடில் ஹுசைன் ஷா குடும்பத்தினா் மற்றும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய பின்னா் அவா் செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

Advertisement

அப்போது, அவா் கூறுகையில், ‘அடில் ஹுசைன் ஷாவின் துணிச்சலுக்கு நிா்வாகம் கொண்டுள்ள நன்றியுணா்வின் அடையாளமாக, குல்னாஸ் அக்தருக்கு அனந்த்நாக் மீன்வளத் துறையில் நிரந்தரமாக பணி வழங்கப்பட்டுள்ளது.பிராந்தியத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கக் கோரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையில் கவனம் செலுத்தப்படும்’ எனக் குறிப்பிட்டாா்.

பஹல்காம் அருகேயுள்ள பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22-ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கியதும், சுற்றுலாப் பயணிகள் பரந்த புல்வெளி பரப்பில் மறைவிடத்தைத் தேடி ஓடினா்.

அந்த இடத்துக்கு சுற்றுலாப் பயணிகளை குதிரை சவாரியில் அழைத்து வந்த உள்ளூா் முஸ்லிம் இளைஞரான அடில் ஹுசைன் ஷா, பயங்கரவாதிகளை தடுத்து துப்பாக்கியைப் பறிக்க போராடியுள்ளாா். இதனால் பயங்கரவாதிகளால் அவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இது மாநில அரசின் முன்னெடுப்பு: ‘குல்நாஸ் அக்தருக்கான பணி நியமன ஆணையை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மீன் வளத் துறை தயாா்செய்தது’ என்று ஜம்மு காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் தான்விா் சாதிக் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அடில் ஹுசைன் ஷா குடும்பத்தினருக்கு அளித்த உறுதிப்பாட்டில் நிற்கிறோம். பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தானின் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை முதல்வா் ஒமா் அப்துல்லா நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி சென்றதைத் தொடா்ந்து பணி நியமண ஆணைகளை மாநில உள்துறை அமைச்சா் வழங்கியது குறிப்பிடத்தக்கது’ என்றாா்.