மேலும் 2 விமானங்கள் இன்று ரத்து: ஏர் இந்தியா
இன்று மொத்தம் 5 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
புது தில்லி: தில்லியிலிருந்து பாரீ்ஸ் புறப்படவிருந்த ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் ஏஐ143 விமானம் இன்று(ஜூன் 17) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத் விமான விபத்தைக் கருத்திற்கொண்டு அனைத்து போயிங் விமானங்களிலும் கூடுதல் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தில்லியிலிருந்து பாரீ்ஸ் புறப்படவிருந்த ஏஐ143 விமானத்தில் பராமரிப்பு பணிகளின்போது கோளாறு இருப்பது தெரிய வந்ததாகவும், இதன் காரணமாக அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாகவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
Advertisement
அந்த விமானத்தில் செல்லவிருந்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் முழுமையாக திருப்பியளிக்கப்படும். அவர்கள் டிக்கெட்டை ரத்து செய்யவில்லையெனில் மாற்று விமானமும் ஏற்பாடு செய்யப்படும். அவர்களுக்கு தேவையான தங்கும் வசதி ஹோட்டல்களில் அமைத்து தரவும் தயாராக இருப்பதாகவும், பயணிகள் இவற்றில் எது வேண்டுமோ அதனை தேர்ந்தெடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கத்தில் இன்று(ஜூன் 17) பாரீ்ஸ் விமான நிலையத்திலிருந்து தில்லிக்கு இயக்கப்படும் ஏஐ142 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.