ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 3 சர்வதேச விமானங்களின் பயணங்கள் பல்வேறு காரணங்களினால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்களின் சர்வதேச பயணங்கள், இன்று (ஜூன் 18) ஒரே நாளில் தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களினால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதில், 2 விமானங்களில் பயணிகள் அமர்ந்து பறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அதன் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தில்லியிலிருந்து இன்று (ஜூன் 18) டொராண்டோ செல்ல தயாரான ஏஐ 188 விமானம், பராமரிப்பு பணிகளின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல், துபாய் - தில்லி இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் காரணங்களினால் ரத்து செய்யப்பட்டதால், அதன் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால், தில்லியிலிருந்து பாலிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், பாதுகாப்பு காரணங்களினால் நடுவழியில் மீண்டும் தில்லிக்கு திருப்பப்பட்டு பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவதிக்குள்ளான பயணிகள் மீண்டும் தங்களது பயணத்தைத் தொடர்வதற்கான நடவடிக்கைகளை ஏர் இந்தியா அதிகாரிகள் மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று, அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் பொயிங் 787-8 விமானம், சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்திலிருந்த 241 பயணிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.