கட்சிப் பதவியிலிருந்து சகோதரர் ஆனந்த் குமார் நீக்கம்: மாயாவதி அதிரடி!
தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஆனந்த் குமாரை நீக்கி அதிரடி அறிவிப்பு..
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது சகோதரர் ஆனந்த் குமாரை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாக மாயாவதி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
நீண்ட காலமாக தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஆனந்த் குமார் சமீபத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். கட்சி மற்றும் இயக்கத்தின் நலனுக்காக ஒரு பதவியில் மட்டும் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது.
Advertisement
Advertisement
இந்த சூழ்நிலையில், ஆனந்த் குமார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய துணைத் தலைவராக இருக்கும்போது, எனது நேரடி வழிகாட்டுதலின் கீழ் முன்பு போலவே தனது பொறுப்புகளைச் செய்வார்.
ஆனந்த் குமாருக்கு பதிலாக உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் வசிக்கும் ரந்தீர் பெனிவாலுக்கு தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை எம்பி ராம்ஜி கௌதம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் ரந்தீர் பெனிவால் இருவரும் எனது வழிகாட்டுதலின் கீழ் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பொறுப்புகளை நேரடியாகக் கையாளுவார்கள். இவர்கள் இருவரும் இணைந்து முழு நேர்மையுடன் பணியாற்றுவார்கள் என்று கட்சி நம்புகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக திங்கள்கிழமை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கட்சி பொருப்பிலிருந்து வெளியேற்றினார். இன்று தனது சகோதரரை வெளியேற்றியுள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.