மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை: பாஜக அறிவிப்பு!
ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வருமானம் கொண்ட பெண்களுக்கு உதவித்தொகை..
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியின்படி மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கௌதம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் கூறியதாவது,
பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியின்படி, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை குடும்ப வருமானம் கொண்ட 15 - 20 லட்சம் பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
Advertisement
ஆனால் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீண்டும் மீண்டும் கேள்விகள் எழுப்பி தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கை(CAG) அம்பலப்படுத்தப்படும் மோசடிகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்குவதாக அரவிந்த் கேஜரிவால் மூன்று வருடங்களாக அளித்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவார் என்று அவர் கூற வேண்டும்.
தில்லி பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டம் பிரதமர் மோடியின் உறுதிமொழியாகும். இது நிறைவேற்றப்படும் என்று ஆத் ஆத்மி தலைவர்களுக்கும் கூடத் தெரியும் என்று அவர் கூறினார். மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையில் போலி பெயர்களைத் தவிர்ப்பதற்காக பல நிலை சரிபார்ப்பில் சிறப்புக் கவனம் செலுத்தி, மகளிர் திட்டத்திற்குத் தகுதியானவர்கள் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு ஒரு ஐடி தளம் தயாராக உள்ளதாகவும் தில்லி அரசின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.