முகப்பு
இந்தியா

ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கு: அதானி சகோதரா்கள் விடுவிப்பு

ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கிலிருந்து தொழிலதிபா் கெளதம் அதானி, அவரின் சகோதரா் ராஜேஷ்

Updated On : 17 மார்ச், 2025 at 10:08 PM
தொழிலதிபா் கெளதம் அதானி
பகிர்:

மும்பை: ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கிலிருந்து தொழிலதிபா் கெளதம் அதானி, அவரின் சகோதரா் ராஜேஷ் அதானியை மும்பை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது.

சுமாா் ரூ.388 கோடி அளவுக்கு பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அதானி என்டா்பிரைசஸ் நிறுவனம் (ஏஇஎல்), அதன் நிறுவனா்கள் கெளதம் அதானி, ராஜேஷ் அதானிக்கு எதிராக தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (எஸ்எஃப்ஐஓ) விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கில் இருந்து கெளதம் அதானியையும், ராஜேஷ் அதானியையும் விடுவித்து மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக எஸ்எஃப்ஐஓ தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை அமா்வு நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

அமா்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் ஏஇஎல் நிறுவனம், கெளதம் அதானி, ராஜேஷ் அதானி சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என்.லடா, ‘இந்த வழக்கில் ஏஇஎல் நிறுவனம், கெளதம் அதானி மற்றும் ராஜேஷ் அதானி மோசடியிலும், குற்றச் சதியிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து மும்பை அமா்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த அவா், வழக்கில் இருந்து ஏஇஎல் நிறுவனம், கெளதம் அதானி மற்றும் ராஜேஷ் அதானியை விடுவித்து உத்தரவிட்டாா்.