பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் மோசடி! ஒரு எழுத்தால் ரூ. 54 லட்சம் இழப்பு!
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ.54.8 லட்சம் மோசடி
அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிறுவனம் (HAL), முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி உபகரணங்கள் உற்பத்தியாளராக இருந்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் போர் ஜெட் விமானங்களை முடிக்கத் தேவையான உபகரணங்களை, இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்.
இதனிடையே, விமானத்தின் பாகங்களை வாங்கும் முயற்சியாக அமெரிக்காவைச் சேர்ந்த பிஎஸ் இன்ஜினியரிங் இன்க் (PS Engineering Inc) நிறுவனத்துடன் கடந்தாண்டு மே மாதம் எச்ஏஎல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக மின்னஞ்சலிலும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்
இந்த நிலையில், விமான பாகங்களுக்கான தொகையை செலுத்துமாறு பிஎஸ் நிறுவனத்தின் பெயரில், எச்ஏஎல்லுக்கு மோசடி கும்பல் ஒன்று மின்னஞ்சல் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, மோசடி கும்பல் என அறியாமல், 63,405 டாலர் (ரூ. 54.8 லட்சம்) தொகையை எச்ஏஎல் அளித்தது.
இதன்பின்னர்தான், மோசடி கும்பலின் மின்னஞ்சல் முகவரியான jlane@ps-enginering.com என்பதில் ஓர் எழுத்து (e) மட்டும் விடுபட்டிருப்பது தெரிந்து, தாம் மோசடிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை எச்ஏஎல் நிறுவனம் அறிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, சைபர் குற்றவியல் காவல்துறையிடம் எச்ஏஎல் புகார் அளித்துள்ளது.