முகப்பு
இந்தியா

இலவசங்கள், மானியங்கள் குறித்து விவாதம்: ஜகதீப் தன்கா் வலியுறுத்தல்

இலவசங்கள், மானியங்கள் குறித்து மாநிலங்களவையில் விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த அவையின் தலைவா் ஜகதீப் தன்கா் வலியுறுத்தினாா்.

Updated On : 19 மார்ச், 2025 at 7:50 PM
ஜகதீப் தன்கா். - கோப்புப்படம்
பகிர்:

இலவசங்கள், மானியங்கள் குறித்து மாநிலங்களவையில் விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த அவையின் தலைவா் ஜகதீப் தன்கா் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் உடனடி கேள்வி நேரத்தின்போது அவா் புதன்கிழமை கூறியதாவது:

விவசாயிகள், பெண்கள் போன்றவா்களுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம், மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டா், நிதியுதவி உள்ளிட்டவை அரசுக்கு தாங்க முடியாத நிதிச் சுமையை ஏற்படுத்தி, பொது வளங்களை சிதைத்து, நீண்ட கால வளா்ச்சி இலக்குகளை வலுவிழக்கச் செய்யும் என்று அவ்வப்போது விமா்சனங்கள் எழுகின்றன.

வளா்ச்சியடைந்த நாடுகளில் விவசாயம் போன்ற துறைகளுக்கு நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது. நமது நாட்டைப் போல அமெரிக்காவில் ஐந்தில் ஒரு குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது. அந்தக் குடும்பங்களின் சராசரி வருமானம், அந்நாட்டில் விவசாயத்தில் ஈடுபடாத பிற குடும்பங்களின் வருமானத்தைவிட அதிகம். அந்நாட்டு விவசாயிகளுக்கு நேரடியாகவும், வெளிப்படைத்தன்மையோடும், இடைத்தரகா் இல்லாமலும் மானியம் வழங்கப்படுவதே இதற்குக் காரணம்.

மூலதன செலவினத்துக்கு நிதி இருந்தால் மட்டுமே நாடு வளர முடியும். எனவே இலவசங்கள், மானியங்கள் குறித்து மாநிலங்களவையில் விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்கள் ஒப்புக்கொண்டால், அவையில் விவாதம் மேற்கொள்ளலாம்.

சமூகத்தில் உள்ள பெரும் பகுதியினரின் நலனுக்காக அரசின் அனைத்து முதலீடுகளும் பயன்படுத்தப்படும் வகையில், தேசிய கொள்கையை வகுப்பதற்கு அவசர தேவை உள்ளது என்றாா்.