மேற்காசிய போர்: இந்தியா நிலைப்பாடு என்ன? மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!
மேற்காசிய போர் - இந்தியா நிலைப்பாடு குறித்து ஜெய்சங்கரின் விளக்கம்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு இன்று தொடங்கியிருக்கும் நிலையில், மேற்காசிய போர் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஜன. 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது. கடந்த பிப்.13-ஆம் தேதியுடன் முதல்கட்ட அமா்வு நிறைவடைந்தது.
இந்த நிலையில், இரண்டாம் கட்ட அமர்வு இன்று காலை தொடங்கிய நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெறும் போர் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
மேற்காசிய போர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கோரிக்கை மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளிக்கு மத்தியில் ஜெய்சங்கர் உரையாற்றினார்.
ஜெய்சங்கர் பேசியதாவது:
”மேற்காசிய நாடுகள் மோதல் குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்து பிப். 20 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. அமைதியைக் கடைப்பிடிக்க இரு தரப்பினரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. பதட்டங்களைத் தணிக்க பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் நடவடிக்கை தொடர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
மேற்காசிய சூழலை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். தொடர்ச்சியான மோதல் இந்தியாவுக்கு கவலை அளிக்கிறது. வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் தங்கி, பணிபுரிந்து வருகிறார்கள். ஈரானிலும், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இருக்கிறார்கள். வளைகுடா நாடுகள் நமது எரிசக்தி பாதுகாப்புக்கு முக்கியமான ஒன்று. நமக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகிக்கும் முக்கிய நிறுவனங்கள் இருக்கின்றன. விநியோகச் சங்கிலி சீர்குலைவு மற்றும் நிலையற்ற தன்மை ஆகியவை கடும் பிரச்னைகளாக இருக்கின்றன.
மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. பாதுகாப்பு நிலைமை கணிசமாக மோசமடைந்துள்ளது. மற்ற நாடுகளிலும் போர் பரவி வருகின்றது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த இரண்டு மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஒருவரைக் காணவில்லை.
தெஹ்ரானில் உள்ள பல இந்திய மாணவர்கள் இந்திய தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வணிக நிமித்தமாக ஈரான் சென்ற இந்தியர்கள், ஆர்மீனியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள நமது தூதரகம் மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாக செயல்பட்டு வருகிறது. இந்தியர்களை பாதுகாப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.