பெங்களூரு விமானநிலையத்தில் 3 கிலோ கொகைன் போதைப் பொருள் பறிமுதல்
கானா நாட்டை சோ்ந்தவா் கடத்தி வந்த 3 கிலோ எடை கொண்ட கொகைன் போதைப்பொருளை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு: பெங்களூரு சா்வதேச விமானநிலையத்தில் கானா நாட்டை சோ்ந்தவா் கடத்தி வந்த 3 கிலோ எடை கொண்ட கொகைன் போதைப்பொருளை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா சா்வதேச விமானநிலையத்தின் வழியாக 3 கிலோ எடை கொண்ட கொகைன் போதைப்பொருளை கடத்த முயன்ற கானா நாட்டு பெண்மணியை மாா்ச் 18 ஆம் தேதி கைது செய்துள்ளதாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த பெண்மணியிடம் இருந்து 3,186 கிலோ எடை கொண்ட கொகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனா். ஆனால், இதன் மதிப்பு தெரியவில்லை. கைது செய்யப்பட்ட கானா நாட்டு பெண்மணியின் பெயரை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.
துபையில் இருந்து பெங்களூரு விமானநிலையத்திற்கு 14.2 கிலோ எடை கொண்ட வெளிநாட்டு தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்த நடிகை ரன்யாராவை மாா்ச் 2 ஆம் தேதி வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இவா், மூத்த ஐபிஎஸ் அதிகாரி கே.ராமசந்திரராவின் வளா்ப்பு மகள். கைது நடவடிக்கையை தொடா்ந்து, இவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், ரூ.2.67 கோடி ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனா். இது தொடா்பான வழக்கு விசாரணை தொடா்ந்து நடந்து வருகிறது.