லஞ்ச வழக்கில் ஜாமீன் பெற்ற லாலு பிரசாத்துக்கு நாட்டின் உயரிய விருது?
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்துக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு அக்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை
பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்துக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு அக்கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
பிகாரின் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்வுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில சட்டப்பேரவையில் அக்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து, அக்கட்சி எம்எல்ஏ முகேஷ் குமார் ரௌஷன் கூறியதாவது, ``நாட்டிலேயே லாலு பிரசாத் மிகவும் பிரபலமானவர். அவர்தான், சமூக நீதியின் மூலம் குரலற்றவர்களுக்கு குரல் கொடுத்தார். ஏழைகள் மற்றும் நலிந்தவர்களின் `மேசியா’வாக (விடுதலை மீட்பாளர்) லாலு திகழ்கிறார்.
Advertisement
ஏழைகளின் உரிமைகளுக்காக போராடியதுடன், அவர்களுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். அவர், நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னாவுக்கு தகுதியானவர். இது தொடர்பாக, மத்திய அரசுக்கு மாநில அரசு ஒரு முன்மொழிவை அனுப்ப வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.
இதையும் படிக்க: மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல்
இருப்பினும், இது தொடர்பாக மாநில அரசின் பரிசீலனையில் உள்ள எந்த திட்டமும் இல்லை என்று கூறிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சௌத்ரி கூறினார். மேலும், தனது தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவை முகேஷ் திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறினார்.
இதனையடுத்து, மசோதாவை முகேஷ் திரும்பப் பெற மறுத்ததால், குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பிலும் இந்த மசோதா வெற்றி பெறவில்லை.
மாட்டுத் தீவின ஊழல் வழக்குகள் சிலவற்றில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த லாலு, இப்போது உடல்நலப் பிரச்னைகள் காரணமாக ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த நிலையில், ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு பிரசாத், அவரின் மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ், மகள் ஹேமா யாதவ் ஆகியோருக்கு தில்லி நீதிமன்றம் சமீபத்தில் சம்மன் அனுப்பியது.