தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான பாஜக அரசு! கார்கே குற்றச்சாட்டு!
தொழிலாளர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
தொழிலாளர்களுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதராகவும் பாஜக அரசு செயல்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மே தினத்தையொட்டி, பெங்களூரில் தொழிலாளர் தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது, ``மத்திய பாஜக அரசானது, தொழிலாளர்களுக்கு எதிரான அரசு. தொழிலாளர்களுக்கான எந்தச் சட்டத்தையும் பாஜக அரசு கொண்டு வரவில்லை. மாறாக, பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், பணக்காரர்களுக்கு ஆதரவாகவும் தொழிலாளர்களுக்கான சட்டத்தை நீக்கத்தான் செய்தனர்.
இந்தியாவில் 44 தொழிலாளர் சட்டங்கள் இருந்தன. ஆனால், அதனை பாஜக அரசு நான்காகக் குறைத்தது. தொழிலாளர்களுக்காக இருந்த அனைத்தையும் நீக்கி, பாஜகவுக்கு விருப்பமானதைச் சேர்த்தனர். தொழிலாளர்களை பாஜக அரசு துன்புறுத்துகின்றனர். தொழிலாளர்கள் 10 மணிநேரம் பணிபுரியவும், பெண்கள் இரவுநேரத்தில் பணிபுரியவும்தான் அவர்கள் அனுமதிக்கின்றனர்.
Advertisement
Advertisement
தொழிலாளர்களைப் பற்றி மத்திய பாஜக அரசு சிந்திக்கவில்லை. தொழிலாளர் வர்க்கத்துக்கு காங்கிரஸ் வழங்கியவற்றை பாஜகவினர் பறித்து விட்டனர்.
எச்எம்டி, எச்ஏஎல், பெல், ஐடிஐ போன்ற பொதுத்துறை நிறுவனங்களை முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஏன் உருவாக்கினார்? ஏனென்றால், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரை தனியார் நிறுவனங்கள் பணியமர்த்துவதில்லை. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடியின் கீழான அரசு மூடி வருகிறது.
அவ்வாறு செய்வதன் மூலம் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது. அப்படி இருக்கையில், இந்தச் சமூகத்தினர் எல்லாம் எங்கே செல்வர்?
தொழிலாளர் வர்க்கம், தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும். தொழிலாளர் வர்க்கம், எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முன்னேறவில்லையெனில், நாடு முன்னேறாது’’ என்று தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.