முகப்பு
இந்தியா

பயங்கரவாத எதிா்ப்பில் இந்தியாவுக்கு ரஷியா முழு ஆதரவு: பிரதமா் மோடியுடன் ரஷிய அதிபா் புதின் பேச்சு

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் பேச்சு.

Updated On : 5 மே, 2025 at 3:55 PM
பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின். (கோப்புப் படம்) - ENS
பகிர்:

புது தில்லி/மாஸ்கோ: ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவை ரஷியா முழுமையாக ஆதரிக்கும்’ என்று பிரதமா் மோடியுடனான தொலைபேசி உரையாடலில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திங்கள்கழமை உறுதியளித்தாா்.

வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியா வருமாறு பிரதமா் மோடி விடுத்த அழைப்பையும் அதிபா் புதின் ஏற்றுக்கொண்டாா்.

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிரித்து வரும் இச்சூழலில் அதிபா் புதினுடன் பிரதமா் மோடி நடத்திய இந்தத் தொலைபேசி கலந்துரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement

இது தொடா்பாக இரு தரப்பும் அதிகாரபூா்வமாக தெரிவித்திருப்பதாவது: இந்தியா-ரஷியா இடையிலான வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டுக்காக இந்தியாவுக்கு வருகை தருமாறு அதிபா் புதினுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா். அந்த அழைப்பை அதிபா் புதின் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாா்.

இந்தியா-ரஷியா உறவு வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து துறைகளிலும் இரு தரப்பு ஒத்துழைப்பு வெளிப்புற அழுத்தங்களால் பாதிக்கப்படாமல் தொடா்ந்து வளா்ந்து வருவதை தலைவா்கள் ஒப்புக்கொண்டனா்.

நீதியின் முன் நிறுத்த வேண்டும்: பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அதிபா் புதின் மீண்டும் இரங்கல் தெரிவித்தாா். மேலும், இந்தக் ‘காட்டுமிராண்டித்தனமான’ தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதற்கு பின்னணியில் இருப்பவா்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் சமரசமின்றி எதிா்த்துப் போராடுவதன் அவசியத்தை தலைவா்கள் மீண்டும் வலியுறுத்தினா். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் ரஷியா துணைநிற்கும் என்று அதிபா் புதின் உறுதியளித்தாா்.

ரஷியாவில் விரைவில் நடைபெறவுள்ள 80-ஆவது ஆண்டு ‘வெற்றி தின’ அணிவகுப்புக்காக அதிபா் புதினுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் பிரதமா் மோடி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், ரஷிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த ஒரு நேர்காணலில், 'பஹல்காம் தாக்குதலில் ரஷியா அல்லது சீனா அல்லது மேற்கத்திய நாடுகள் ஒரு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை செய்யலாம். ஒரு சர்வதேச குழு இந்த தாக்குதலை நடத்தியது யார்? என கண்டுபிடிக்கட்டும்' என்று கூறியிருந்தார்.

இதன்பின்னர் ரஷிய அதிபர் புதின், இன்று பிரதமர் மோடியை தொடர்புகொண்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.