சிந்தூர் தாக்குதல்: நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை! விடியோ
சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.
சென்னை துறைமுகம் உள்பட இரண்டு இடங்கள் மற்றும் புதுச்சேரி என நாடு முழுவதும் 54 ஆண்டுகளுக்குப் பிறகு போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியிருக்கிறது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு செவ்வாய்க்கிழமை இரவு இந்தியா பதில் தாக்குதலை நடத்திய நிலையில் இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியுள்ளது.
எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகள் நடந்து வருகின்றன.
சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கத்தில் போர்க்கால ஒத்திகை நடைபெற்றது. கல்பாக்கத்தில் வீரர்கள், மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகையானது முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
மிகப்பெரிய கட்டடமைப்புகளுக்குள் தாக்குதல் நடத்தப்படும்போது, மின் விளக்குகளை அணைத்து, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற ஒத்திகைகள் நடைபெற்று வருகிறது.
தலைநகர் தில்லி மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களிலும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இங்கு சைரன்களை ஒலிக்கச் செய்து மக்களை ஓரிடத்துக்கு அழைத்துச செல்வது, போன்று நடத்திக்காட்டப்பட்டது. போர்ச் சூழலின்போது மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் மக்கள் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுளள்து.
எல்லை மாநிலங்களில் ஒத்திகை தீவிரம்
போர்க்காலத்தில் மக்கள் கூடும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மக்கள் எவ்வாறு மறைவான இடங்களில் ஒளிந்துகொள்ள வேண்டும், தப்பிச் செல்வது, பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்வது என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
போர் பதற்றம் ஏற்பட்டால் அதிக அபாயத்துக்கு உரிய மாநிலங்களாக, நாட்டின் எல்லை மாநிலங்களே உள்ளன. அந்த வகையில் ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது கயிறு மூலம் உயரமான கட்டடங்களுக்குள் இருந்து மக்களை இறக்கியும் வெடிச்சப்தம் கேட்டதும் எவ்வாறு இருக்கும் இடத்திலேயே தரையில் அப்படியே படுத்துக்கொள்ள வேண்டும் என்றும் செய்துகாட்டப்பட்டது.
பயிற்சி பெற்ற பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள், மாணவர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
கடைசியாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு போர் ஏற்பட்டபோது போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்ற நிலையில், மீண்டும் இன்று நடைபெற்றுள்ளது.