முகப்பு
இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் மோதல்: பிரதமர் மோடி அடுத்தடுத்து ஆலோசனை

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் நீடித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

Updated On : 10 மே 2025, 3:07 pm IST
பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை
பகிர்:

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கடுமையான மோதல் நடந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று பிரதமர் அலுவலகத்தில் போர்ச் சூழல் குறித்து ஐந்து மணி நேரம் ஆலோசனை நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Advertisement

Advertisement

இந்த ஆலோசனைக்குப் பின் முப்படைத் தளபதிகள் மற்றும் முப்படைத் தலைமை தளபதி அனில் சௌகான் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தின்போதும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் முதல் எல்லைப் பகுதியை ஒட்டிய 26 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் நான்கு விமானத் தளங்களை குறி வைத்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருக்கிறது. இந்தநிலையில்தான் 3 மணி நேரத்துக்கும் மேலாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆலோசனையானது அவரது இல்லத்தில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, இன்று முற்பகலில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி, இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, விமானப் படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.