இந்தியா - மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில் கையெழுத்து.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று(பிப். 8) கையெழுத்தானது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மலேசியாவுக்கு சென்றுள்ளார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு இரு நாடுகளின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இசை-நடனத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் பிரதமர் மோடியை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் நேரில் வரவேற்றனர்.
நடப்பாண்டில் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேசியாவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்.
இந்த நிலையில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் பிரதமா் மோடி இன்று(பிப். 8) இருதரப்பு உயர்நிலை பேச்சுவாா்த்தையை நடத்தினார்.
இருநாடுகளும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பேச்சுவாா்த்தைக்குப் பின், முக்கிய ஒப்பந்தங்கள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மலேசிய பிரதமர் முன்னிலையில் கையெழுத்தானது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ” இன்று காலை பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் சிறந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்தியாவும் மலேசியாவும் கடல்வழி அண்டை நாடுகள், இரு நாடுகளும் எப்போதும் நெருங்கிய நட்புறவைப் போற்றி வருகின்றன.
வர்த்தகம், உள்கட்டமைப்பு, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் உள்ள வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை நாங்கள் ஆய்வு செய்தோம்.
பாதுகாப்பு, தற்காப்பு, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் செமிகண்டக்டர் ஆகிய துறைகளிலும் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.