முகப்பு
இந்தியா

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் காலமானார்!

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் மறைவு பற்றி...

Updated On : 20 மே 2025, 11:28 am IST
எம்.ஆர். சீனிவாசன் - படம்: எக்ஸ்/மல்லிகார்ஜுன கார்கே
பகிர்:

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர். சீனிவாசன் (வயது 95) செவ்வாய்க்கிழமை காலமானார்.

கர்நாடகத்தைப் பூர்விகமாகக் கொண்ட சீனிவாசன், உதகை மதுவானாவில் வசித்து வந்த நிலையில், வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

சீனிவாசன் பின்னணி...

செப்டம்பர் 1955 இல் அணுசக்தித் துறையில் சீனிவாசன் சேர்ந்தார். இந்தியாவின் முதல் அணு ஆராய்ச்சி உலையான அப்சராவின் கட்டுமானத்தில் டாக்டர் ஹோமி பாபாவுடன் இணைந்து பணியாற்றினார்.

ஆகஸ்ட் 1959 இல், இந்தியாவின் முதல் அணு மின் நிலையத்தின் கட்டுமானத்திற்கான முதன்மை திட்டப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். 1967 இல், மெட்ராஸ் அணு மின் நிலையத்தின் தலைமை திட்டப் பொறியாளராகப் பொறுப்பேற்றபோது, அவரது தலைமை நாட்டின் அணுசக்தித் திட்டத்தை தொடர்ந்து வடிவமைத்தது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய பதவிகளை சீனிவாசன் வகித்தார். 1974 ஆம் ஆண்டில், அணுசக்தி திட்ட பொறியியல் பிரிவின் இயக்குநராகவும், 1984 இல் அணுசக்தி வாரியத்தின் தலைவராகவும் ஆனார். இந்தப் பதவிகளில், நாடு முழுவதும் உள்ள அனைத்து அணுசக்தித் திட்டங்களின் திட்டமிடல், செயல்படுத்தல் மற்றும் செயல்பாட்டை அவர் மேற்பார்வையிட்டார்.

1987 ஆம் ஆண்டில், அவர் அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில், அவர் இந்திய அணுசக்தி கழகத்தின் நிறுவனர்-தலைவராக ஆனார். அவரது தலைமையின் கீழ், 18 அணுசக்தி அலகுகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஏழு செயல்பாட்டில் இருந்தன. ஏழு கட்டுமானம் மற்றும் நான்கு திட்டமிடல் நிலையில் உள்ளன.

இந்தியாவின் அணுசக்தித் திட்டத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கார்கே இரங்கல்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில்,

“மூத்த அணு விஞ்ஞானியும் பத்ம விபூஷண் விருது பெற்றவருமான டாக்டர் எம்.ஆர். சீனிவாசனின் மறைவு, இந்தியாவின் அறிவியல் சமூகத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க இழப்பாகும்.

இந்தியாவின் முதல் அணு உலையான அப்சராவில் (1956) டாக்டர் ஹோமி பாபாவுடன் தனது புகழ்பெற்ற வாழ்க்கையைத் தொடங்கிய சீனிவாசன், அணுசக்தி ஆணையத்தின் தலைவர் மற்றும் திட்டக் குழுவின் உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை 18 அணு மின் அலகுகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

அவரது தொழில்நுட்பத் திறமையும், அசைக்க முடியாத சேவையும் இந்தியாவின் அணுசக்தி நிலப்பரப்பில் ஒரு நீடித்த மரபை விட்டுச் சென்றுள்ளன.

அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments