டிமிட்ரி மெண்டலீவ் 
சிறப்புக் கட்டுரைகள்

அறிவியல் ஆயிரம்: தனிம அட்டவணையைக் கண்டறிந்த டிமிட்ரி மெண்டலீவ்!

வேதியியலில் தனிம அட்டவணையைக் கண்டறிந்த அறிவியலாளர் டிமிட்ரி மெண்டலீவ் பற்றி...

பேரா. சோ. மோகனா

யார் இந்த டிமிட்ரி இவானோவிச் மெண்டலீவ்?

டிமிட்ரி இவானோவிச் மெண்டலீவ் ஒரு ரஷிய வேதியியலாளர். இவர் ஆவர்த்தன விதியை வகுத்தமைக்கும் தனிமங்களின் ஆவர்த்தன அட்டவணை/கால அட்டவணையின்  ஒரு பதிப்பை உருவாக்கியமைக்கும் உரிமையாளர். "கால அட்டவணையின் தந்தை " என்று அறியப்பட்டிருந்தார்.

அறியப்பட்டிருந்த சில தனிமங்களின் பண்புகளை (யுரேனியத்தின் இணைதிறன் மற்றும் அணு எடை போன்றவை) திருத்துவதற்கு மட்டுமல்லாமல், இன்னும் கண்டுபிடிக்கப்படாத மூன்று தனிமங்களின் (ஜெர்மானியம், காலியம் மற்றும் ஸ்காண்டியம்) பண்புகளைக் கணிக்கவும் இவர் ஆவர்த்தன விதியைப் பயன்படுத்தினார். செயற்கைத் தனிமமான மெண்டலீவியம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.

மெண்டலீவ் பிறப்பும் இளமைக்காலமும்

ரஷியாவின் சைபீரியா நகர். பூமியின் வடகோடி, வடதுருவப் பகுதி. பனி தூங்காத நிலம் அது. அங்கே சைபீரியாவிலுள்ள தொபோல்ஸ்கிற்கு அருகில் உள்ள வெர்க்னியே அரெம்ஸியானி கிராமத்தில் பிறந்தார் டிமிட்ரி இவானோவிச் மெண்டலீவ் (Dmitri Mendeleev).

பிப்ரவரி மாதம் சைபீரியாவில் கடுமையான குளிர்வெப்பநிலைதான். வானிலை எப்போதும் −15 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்ஸியஸ் வரை இருக்கும். அந்த கடுங்குளிரான பிப்ரவரி மாதத்தில்தான்,1834 ஆண்டு மெண்டலீவ் 8 ஆம் நாள் பிறந்தார். அவர் பிறந்தபோது அவர், உலகம் போற்றும் வேதியலாளர் என்பதை பற்றி அவரின் பெற்றோர் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. சாதாரண குடும்பமாகவே அவரின் குடும்பம் இருந்தது.

அவரின் தந்தை பெயர்: இவான் பாவ்லோவிச் மெண்டலீவ் (Ivan Pavlovich Mendeleev); அன்னையின் பெயர்: மரியா டிமிட்ரிவ்னா மெண்டலீவா ( Maria Dmitrievna Mendeleeva). மெண்டலீவின் தந்தை அங்குள்ள ஒரு பள்ளியில் முதல்வராகவும் டாம்போவ் மற்றும் சாரடோவ் உயர்நிலைப் பள்ளிகளில் நுண்கலைகள், அரசியல் மற்றும் தத்துவம் ஆகியவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றினார். ஆனால் பாவம், மெண்டலீவ் பிறந்த 1834 ஆண்டு அவர் பார்வை இழந்தார். 1847 இல் இறந்தார். அவர் ஒரு ரஷிய பாரம்பரிய பாதிரியாரின் மகன். அக்கால குருக்களின் மரபுக்கு ஏற்ப, தேவாலயக் கல்விக் கழகத்தில்  (தியோலாஜிக்கல் செமினாரி) கல்வி பயின்றபோது பாவெலின் குழந்தைகளுக்குப் புதிய குடும்பப் பெயர்கள் வழங்கப்பட்டன. அப்போது, இவானுக்கு ஒரு உள்ளூர் நிலக்கிழாரின் பெயரைத் தொடர்புபடுத்தி 'மெண்டலீவ்' என்னும் குடும்பப் பெயர் கிடைத்தது.

அன்னை மரியா

ஆனால் அவரது அன்னை மரியா டிமிட்ரிவ்னா மெண்டலீவா, முதல் சைபீரிய அச்சகத்தை நிறுவிய பணக்கார கோர்னிலீவ் குடும்பத்திலிருந்து வந்தவர். மென்டலீவ் தந்தை பார்வை இழந்து, கற்பித்தல் பதவியையும் இழந்தார். எனவே  அவரது தாய் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரின் அன்னை, குடும்பத்தின் கைவிடப்பட்ட கண்ணாடித் தொழிற்சாலையை மீண்டும் தொடங்கினார். மென்டலீவின் 13வது  வயதில், அவரது தந்தை காலமான பிறகு, தாயின் தொழிற்சாலை தீயில் அழிந்த பிறகு, மெண்டலீவ் தொபோல்ஸ்கில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் (ஜிம்னாசியம்) சேர்ந்தார்.

சகோதரர்கள்

மெண்டலீவின் குடும்பம் மிகப்பெரியது. அவருடன் பிறந்தவர்கள் 14-17 பேர்கள். 17 பேராக இருக்கலாம் என பலர் கருதுகின்றனர். மெண்டலீவ் 17 சகோதரர்களில் இளையவர்; அவர்களில் "14 பேர் மட்டுமே பாப்டிசம் செய்யப்படும் வரை உயிருடன் இருந்தனர்" என மெண்டலீவின் சகோதரர் பாவெல் கூறுகிறார், அதாவது மற்றவர்கள் பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டனர்.

ஆதரவற்ற நிதி நிலையில் - அன்னையின் பணி

குடும்பத்தின் நிதி நலனுக்கு துரதிர்ஷ்டவசமாக பிரச்னை ஏற்பட்டது. அவரது தந்தை பார்வை இழந்து, தனது கற்பித்தல் பதவியையும் இழந்தார். அவரது தாய் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, தனது குடும்பத்தின் கைவிடப்பட்ட கண்ணாடித் தொழிற்சாலையை மீண்டும் தொடங்கினார். 13 வயதில், அவரது தந்தை காலமான பிறகும், தாயின் தொழிற்சாலை தீயில் அழிந்த பிறகும், மெண்டலீவ் தொபோல்ஸ்கில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் (ஜிம்னாசியம்) சேர்ந்தார். மென்டலீவ் இறை நம்பிக்கையுள்ள கிறித்துவராகவே வளர்க்கப்பட்டார்.

கல்வி

மெண்டலீவின் அன்னை மரியா, கல்விதான் மகனுக்குப் பெரிய சொத்து என்று தீர்மானித்தார். (அந்த தீர்மானம்தான் அறிவியலின் வரலாற்றைப் புரட்டிப் போட்டது ) எனவே  1849-ஆம் ஆண்டில் மெண்டலீவை மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்க்கும் நோக்கத்துடன், அவரது தாயார் சைபீரியாவிலிருந்து மெண்டலீவை மாஸ்கோவுக்குக் கூட்டிச் சென்றார். மாஸ்கோவில் உள்ள பல்கலைக்கழகம் மெண்டலீவை ஏற்கவில்லை. தாயும் மகனும் பிறகு புனித பீட்டர்ஸ்பர்க்கிற்குச் சென்றனர், அங்கு தந்தையின் முன்னாள் கல்வி நிலையமான (அல்மா மேட்டர்) முதன்மை கல்வியியல் நிறுவனத்தில் 1850-ஆம் ஆண்டில் சேர்ந்தார்.

நோய் பாதிப்பு & பணி  

பட்டம் பெற்ற பிறகு மெண்டலீவை காசநோய் தாக்கியது. எனவே 1855 ஆம் ஆண்டு, அவர்கள் கருங்கடலின் வடக்குக் கரையில் உள்ள கிரிமியா தீபகற்பத்திற்கு குடிபெயர்ந்தனர். அங்கு, மெண்டலீவ்  முதல் சிம்பெரோபோல் உயர்நிலைப் பள்ளியின் அறிவியல் (வேதியல்) ஆசிரியரானார். 1857-ஆம் ஆண்டு மென்டலீவ், முற்றிலும் மீட்டெடுக்கப்பட்ட உடல்நலத்துடன் புனித பீட்டர்ஸ்பர்க்கிற்குத் திரும்பினார்.

 தேடினேன் வந்தது!

அப்போது வேதியியல் எப்படி இருந்தது தெரியுமா? தனிமங்கள் இருந்தன.;பெயர்கள் இருந்தன; பண்புகள் இருந்தன. ஆனால் அவைகளில் ஒழுங்கு இல்லை; தொடர்பு இல்லை,அர்த்தமும் இல்லை. அறிவியல் பொருட்கள் குவிக்கப்பட்ட ஓர் அறை போலவே இருந்தது. மெண்டலீவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இதுதான் இயற்கையா? இவற்றில் நாம் தேடிப்பார்ப்போம் என்று நினைத்தார். அவற்றைத் தேடினார் இளைஞரான மெண்டலீவ்.

"டெமிடோவ்" பரிசு

1859 மற்றும் 1861க்கு இடையில், ஹெய்டல்பர்க்கில் திரவங்களின் மயிர்த்துளைத் தன்மை மற்றும் நிறமாலையின் (Spectroscope) செயல்பாடுகள் குறித்து பணியாற்றினார். பின்னர் 1861 ஆம் ஆண்டு, கரிம வேதியியல் என்ற பாடப் புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகம் அவருக்கு  பீட்டர்ஸ்பர்க் அகாடமி ஆஃப் சயின்சஸின் "டெமிடோவ் பரிசை" அவருக்குப் பெற்றுத் தந்தது.

திருமணம்

மெண்டலீவுக்கு 1862 ஆம் ஆண்டு, ஏப்ரல் 4 ஆம் நாள் ஃபியோஸ்வா நிகிதிச்னா லெஷ்சேவா என்ற பெண்ணுடன் திருமண ஒப்பந்தம் நிகழந்தது. ஏப்ரல் 27, 1862 அன்று புனித பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள நிகோலாயெவ் பொறியியல் நிறுவனத்தின் (அங்கு அவர் கற்பித்தார்) தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார்.

பல்கலைக்கழக பேராசிரியர்

மெண்டலீவ் 1864-ஆம் ஆண்டு புனித பீட்டர்ஸ்பர்க் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் 1865 ஆம் ஆண்டு, புனித பீட்டர்ஸ்பர்க் மாநிலப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியரானார். 1865-ஆம் ஆண்டு இவர், "ஆல்கஹாலுடன் நீரின் கலவைகள்" எனும் ஆய்வறிக்கைக்காக அறிவியல் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர், 1867 ஆம் ஆண்டு,  புனித பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் நிரந்தர பணியாளர் பதவி பெற்று, கனிம வேதியியலை கற்பிக்கத் தொடங்கினார்;  இதற்கு இடையில் 1869 ஆம் ஆண்டு தனிமங்களை வகைப்படுத்தத் முயன்றார். அப்போது வோஸ்க்ரெசென்ஸ்கியின் பதவியையும்  ஏற்றார். இதற்கிடையில், அவர் 1871-ஆம் ஆண்டு,, புனித பீட்டர்ஸ்பர்க்கை வேதியியல் ஆராய்ச்சிக்கான சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மையமாக மாற்றியிருந்தார்.

ஆவர்த்தன அட்டவணையின் வரலாறு

(மெண்டலீவின் 1871ஆம் ஆண்டின்  ஆவர்த்தன அட்டவணை))

1863-ஆம் ஆண்டு வரை  56 தனிமங்கள் அறியப்பட்டிருந்தன. ஒரு புதிய தனிமம் வருடத்திற்கு சுமார் ஒன்று என்ற விகிதத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வந்தது. மற்ற விஞ்ஞானிகள் முன்னதாகவே தனிமங்களின் ஆவர்த்தனத் தன்மையை அடையாளம் கண்டிருந்தனர்.

பாடப் புத்தகம்

மெண்டலீவ் 1867-ஆம் ஆண்டு ஆசிரியரான பிறகு, வேதியியலின் அடிப்படைகள் (ரஷிய மொழி, ரோமானிய மொழியில்) எனும் பாடப்புத்தகத்தை எழுதினார். அது அதன் காலத்தின் முழுமையான பாடப்புத்தகமாக மாறியது. இது 1868 மற்றும் 1870-க்கு இடையில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டது; தனது பாடத்திற்கான பாடப்புத்தகத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த போது மெண்டலீவ் அதை எழுதினார். இதற்கிடையில்தான் அவர் தனது மிக முக்கியமான கண்டுபிடிப்பைச் செய்தார். அதுதான் தனிமங்களின் கால அட்டவணை. தனிமங்களை அவற்றின் வேதியியல் பண்புகளின்படி வகைப்படுத்த முயற்சிக்கும்போது, அவர் தனது ஆவர்த்தன அட்டவணையை முன்மொழிய வழிவகுத்த வடிவங்களைக் கவனித்தார்.

அட்டைகளாக மாறிய தனிமங்கள்

மெண்டலீவ் 1867 ஆம் ஆண்டில் ஒரு நாள், ஒரு விநோதமான வேலையை செய்தார். ஒவ்வொரு தனிமத்தையும் ஒரு சிறு அட்டையாக எழுதினார். அவை: பெயர், அணு, எடை, பண்புகள். பிறகு... அவைகளை மேசையில் பரப்பினார். சீட்டாட்டம்போல. ஒன்றை நகர்த்தினார். மற்றொன்றை மாற்றினார். மீண்டும் மாற்றினார். இப்படியாக தனிமங்களைக் கண்டறிந்தார்.

உலகை மாற்றிய தூக்கம் - கனவுகண்டுபிடிப்பு

ஒரு நாள், அவர் இந்தபணியினூடே அயர்ந்து, சோர்ந்து தூங்கிவிட்டார். ஆம். அறிவியல் வரலாற்றிலேயே மிக முக்கியமான தூக்கம் அது..! அந்த கனவில் தனிமங்கள் வரிசையாக அமைந்தன.

ஒவ்வொன்றும் அடுத்ததோடு தொடர்பு கொண்டது. அவர் திடுக்கிட்டு எழுந்தார். “இதுதான்!” மென்டலீவ்: கால அட்டவணை பிறந்த கதை. ஒரு கனவில் தனிமங்களின் முழுமையான ஏற்பாட்டைக் கண்டதாக அவர் கூறினார்.

நனவான கனவு

"அனைத்து தனிமங்களும் தேவையான இடத்தில் விழுந்த ஒரு அட்டவணையை நான் ஒரு கனவில் கண்டேன். விழித்தெழுந்ததும் நான் அதை உடனடியாக ஒரு காகிதத்தில் எழுதினேன், ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பின்னர் ஒரு திருத்தம் தேவைப்பட்டதாகத் தோன்றியது" மெண்டலீவ் சொன்னது இது.

1860களில் ஆவர்த்தன அட்டவணைகள் குறித்த முந்தைய பணிகள் இருப்பதை அறியாமல், அவர் பின்வரும் அட்டவணையை உருவாக்கினார்:

Cl 35.5 K 39 Ca 40;Br 80 Rb 85 Sr 88; I 127 Cs 133 Ba 137

இந்த முறையைப் பின்பற்றி கூடுதல் தனிமங்களைச் சேர்ப்பதன் மூலம், மெண்டலீவ் தனது விரிவாக்கப்பட்ட ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார். மார்ச் 6, 1869 அன்று, தனிமங்களின் அணு எடைகளின் பண்புகளுக்கிடையிலான சார்பு எனும் தலைப்பில் ரஷிய வேதியியல் சங்கத்துக்கு, ஒரு முறையான விளக்கக் காட்சியைச் செய்தார்; இது தனிமங்களை அணு எடை (இப்போது தொடர்புடைய அணு நிறை என்று அழைக்கப்படுகிறது) மற்றும் இணைதிறன் (Valency) ஆகிய இரண்டின் அடிப்படையில் விவரித்தது.  

இந்த விளக்கக் காட்சி பின்வருமாறு கூறியது:

தங்கள் அணு எடையின்படி வரிசைப்படுத்தப்பட்டால், தனிமங்கள் பண்புகளின் வெளிப்படையான ஆவர்த்தனத் தன்மையைக் காட்டுகின்றன. அவற்றின் வேதியியல் பண்புகளின் அடிப்படையில் ஒத்த தனிமங்கள் ஒத்த அணு எடைகளைக் கொண்டிருக்கின்றன (எ.கா., Pt, Ir, Os) அல்லது அவற்றின் அணு எடைகள் ஒழுங்காக அதிகரித்துக்கொண்டே போகின்றன (எ.கா., K, Rb, Cs). அவற்றின் அணு எடைகளின் வரிசையில் தனிமங்களின் குழுக்களில் தனிமங்களின் ஏற்பாடு அவற்றின் இணைதிறன்களுடன். அதே போல், அவற்றின் தனித்துவமான வேதியியல் பண்புகளுடன் ஓரளவு ஒத்துப்போகிறது; Li, Be, B, C, N, O மற்றும் F ஆகியவற்றின் தொடரில் இது தெளிவாகத் தெரிகிறது. மிகவும் பரவலாகப் பரவியுள்ள தனிமங்கள் சிறிய அணு எடைகளைக் கொண்டுள்ளன.

அணு எடையின் அளவு தனிமத்தின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதே போல் மூலக்கூறின் அளவு ஒரு கலவைப் பொருளின் தன்மையைத் தீர்மானிக்கிறது. இன்னும் பல அறியப்படாத தனிமங்களைக் கண்டுபிடிப்பதை எதிர்பார்க்க வேண்டும் - எடுத்துக்காட்டாக, அலுமினியம் மற்றும் சிலிக்கான் போன்ற இரண்டு தனிமங்கள், அவற்றின் அணு எடைகள் 65 மற்றும் 75 க்கு இடையில் இருக்கும்.

மெண்டலீவ் உருவாக்கியது:

அணு எடையின் அடிப்படையில் ஒழுங்கு; ஒத்த பண்புகள் ஒரே நெடுவரிசை; மீண்டும் மீண்டும் வரும் பண்புகள். ஆனால்… அவர் செய்த மிகப்பெரிய துணிச்சல்? காலியிடங்கள்.

ஒரு தனிமத்தின் அணு எடை சில நேரங்களில் அதன் அண்டை தனிமங்களின் அணு எடைகளை அறிந்து திருத்தப்படலாம். இதனால், டெல்லூரியத்தின் அணு எடை 123 மற்றும் 126 க்கு இடையில் இருக்க வேண்டும். மேலும் 128 ஆக இருக்க முடியாது. (டெல்லூரியத்தின் அணு எடை 127.6 ஆகும். ஓர் ஆவர்த்தனத்திற்குள் நிலையில் அதிகரிக்க வேண்டும் என மெண்டலீவ் கருதியது தவறானது) குறிப்பிட்ட சிறப்பியல்பு பண்புகளை அவற்றின் அணு எடைகளில்  முன்கூட்டியே கணிக்கலாம். மெண்டலீவ் அனைத்து அறியப்பட்ட தனிமங்களின் தனது ஆவர்த்தன அட்டவணையை ஒரு ரஷிய மொழி இதழில் வெளியிட்டார், அட்டவணையை நிறைவு செய்வதற்காக பல புதிய தனிமங்களை கணித்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு, மேயர் ஒரு ஜெர்மன் மொழி இதழில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அட்டவணையை வெளியிட்டார். (எகா) சிலிக்கான், (எகா) அலுமினியம் மற்றும் எகாபோரான் (முறையே ஜெர்மானியம், காலியம் மற்றும் ஸ்காண்டியம்) என அவர் அழைத்தவற்றின் பண்புகளைத் துல்லியமாகக் கணித்தமைக்காக மெண்டலீவ் சிறப்புப் பெற்றார்.

மெண்டலீவ் சில அறியப்பட்ட தனிமங்களின் பண்புகளில் மாற்றங்களை முன்மொழிந்தார். அவரது பணிக்கு முன்னர், யுரேனியம் இணைதிறன் 3 மற்றும் அணு எடை சுமார் 120 என்று கருதப்பட்டது. இந்த மதிப்புகள் அவரது ஆவர்த்தன அட்டவணையில் பொருந்தவில்லை என மெண்டலீவ் உணர்ந்து, இரண்டையும் இணைதிறன் 6 மற்றும் அணு எடை 240 (தற்கால மதிப்பான 238 க்கு அருகில்) என இரட்டிப்பாக்கினார்.

அவர் கணித்த மூன்று தனிமங்களுக்கு, அவற்றின் பெயரிடலில் எகா, த்வி மற்றும் த்ரி (சமஸ்கிருதத்தில் ஒன்று, இரண்டு, மூன்று) ஆகிய முன்னொட்டுகளைப் பயன்படுத்தினார். மெண்டலீவ் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட சில அணு எடைகளை (அந்த நேரத்தில் ஒப்பீட்டளவில் குறைந்த துல்லியத்துடன் மட்டுமே அளவிட முடியும்) கேள்விக்குள்ளாக்கினார், அவை அவரது ஆவர்த்தன விதியால் பரிந்துரைக்கப்பட்டவற்றுடன் பொருந்தவில்லை என்று சுட்டிக்காட்டினார். டெல்லூரியத்தின் அணு எடை அயோடினைவிட அதிகமாக உள்ளது, ஆனால் அவர் அவற்றை சரியான வரிசையில் வைத்தார். அந்த நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணு எடைகள் தவறானவை என்று தவறாக கணித்தார். அறியப்பட்ட லாந்தனைடுகளை எங்கு வைப்பது என்பது குறித்து அவர் குழப்பமடைந்தார்; மேலும் அட்டவணையில் மற்றொரு வரிசை இருக்கும் என்று கணித்தார். அதுவே ஆக்டினைடுகள் ஆகும், அவை அணு எடையில் மிகவும் கனமானவை. மேலும் தனிமங்கள் இருப்பார்கள் என்று மெண்டலீவ் கணித்ததற்காக சிலர் அவரை புறக்கணித்தனர். ஆனால் Ga (காலியம்) மற்றும் Ge (ஜெர்மானியம்) முறையே 1875 மற்றும் 1886 இல் கண்டுபிடிக்கப்பட்டபோது, இரண்டு வெற்றிட இடங்களிலும் சரியாக பொருந்தியபோது, அவர் சரியாக இருந்தார் என நிரூபிக்கப்பட்டார்.

புத்தகத்தின் இரண்டாவது பதிப்பைத் தயாரித்துக் கொண்டிருந்தார்; மெண்டலீவ் பெயரிடல் முறையில் இந்திய நாட்டின் பாணினியை கௌரவிக்க விரும்பினார்

மெண்டலீவ் செய்த அசல் வரைவு பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு, தனிமங்களின் முயற்சி முறை ( என்ற பெயரில் வெளியிடப்பட்டது. டிமிட்ரி மெண்டலீவ் பெரும்பாலும் "ஆவர்த்தன அட்டவணையின் தந்தை" என்று குறிப்பிடப்படுகிறார். அவர் தனது அட்டவணையை அல்லது அணியை, "ஆவர்த்தன முறை" என்று அழைத்தார்.

பிற்கால வாழ்வு

1876-ல், அவர் அண்ணா இவனோவ்னா போபோவாவுடன் வெறித்தனமாக அவரை நாடத் தொடங்கினார்; 1881-ல் அவர் மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். லெஷ்சேவாவிடமிருந்து மணமுறிவு ஏற்பட்டது. 1882-ஆம் ஆண்டு துவக்கத்தில் அவர் ஆரம்பத்தில் போபோவாவை (ஏப்ரல் 2 அன்று) மணந்து கொண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இறுதி செய்யப்பட்டது. மணமுறிவுக்குப் பிறகும், மெண்டலீவ் தொழில்நுட்ப ரீதியாக இரட்டை மணம் செய்தவராக இருந்தார்; சட்டபூர்வமாக மறுமணம் செய்து கொள்வதற்கு முன்பு குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் தேவை என்று ரஷிய மரபுவழித் திருச்சபை கோரியது. அவரது மணமுறிவும், சூழ்ந்திருந்த சர்ச்சையும், ரஷிய அறிவியல் அகாடமியில் அங்கீகாரம் பெறாமல் இருப்பதற்கு காரணியாயின.

அந்த நேரத்தில் அவருக்கு சர்வதேச புகழ் இருந்தபோதிலும், அவரது இரண்டாம் மனைவியிடமிருந்து அவரது மகள், லியுபோவ், பிரபலமான ரஷிய கவிஞர் அலெக்சாண்டர் ப்ளோக்கின் மனைவியானார். அவரது பிற குழந்தைகள் மகன் விளாடிமிர் (ஒரு மாலுமி, அவர் நிக்கோலஸ் II இன் குறிப்பிடத்தக்க கிழக்கு பயணத்தில் பங்கேற்றார்) மற்றும் மகள் ஒல்கா ஆகியோர் முதல் மனைவி ஃபியோஸ்வாவிடமிருந்தும், மகன் இவான் மற்றும் இரட்டையர்கள் அண்ணாவிடமிருந்தும் பிறந்தவர்கள்.

அறிவியல் பாராட்டு

மெண்டலீவ் ஐரோப்பா முழுவதிலுமுள்ள அறிவியல் அமைப்புகளால் பரவலாக கௌரவிக்கப்பட்ட போதிலும், (1882-ல்) லண்டனின் ராயல் சொசைட்டியிலிருந்து டேவி பதக்கம் உட்பட. (பின்னர் 1905-ல் கோப்ளே பதக்கமும் வழங்கியது), ஆகஸ்ட் 17, 1890 அன்று புனித பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் 1892-ஆம் ஆண்டு, ராயல் சொசைட்டியின் வெளிநாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1893-ஆம் ஆண்டு  நிறைகள் மற்றும் அளவீடுகளின் பணியகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியை அவர் தனது இறப்பு வரை வகித்தார்.

பெட்ரோலியம்

மெண்டலீவ் பெட்ரோலியத்தின் கூட்டுக்கலவையை ஆராய்ச்சி செய்தார், மேலும் ரஷியாவின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை நிறுவ உதவினார். பெட்ரோ கெமிக்கல்களுக்கான மூலப்பொருளாக பெட்ரோலியத்தின் முக்கியத்துவத்தை அவர் அங்கீகரித்தார். எரிபொருளாக பெட்ரோலியத்தை எரிப்பது "வங்கி நோட்டுகளால் சமையலறை அடுப்பை பற்றவைப்பதற்கு ஒப்பானது" என்று கூறியமைக்கு அவர் காரணமாக அறியப்படுகிறார்.

தனிமம் எதிர்பார்த்து...

மெண்டலீவ் சொன்னார்: “இந்த இடம் காலியாக இருக்கட்டும் .இன்னும் கண்டுபிடிக்கப்படாத தனிமம் இங்கேதான் வரும்.” மக்கள் சிரித்தார்கள். ஆனால்…அடுத்த சில ஆண்டுகளில்: காலியம், ஜெர்மானியம், ஸ்காண்டியம்(Gallium,Germanium, Scandium) என அவர் சொன்ன பண்புகளோடு அப்படியே கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது உலகம் அமைதியாக ஒப்புக்கொண்டது.

நோபல் கிட்டாத மெண்டலீவ்

மெண்டலீவ் அவரது வாழ்க்கையின் கடைசி மூன்று ஆண்டுகளான 1905, 1906 மற்றும் 1907 ஆகியவற்றில், 9 நியமனங்களில் வேதியியலுக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.  1905-ஆம் ஆண்டில், மெண்டலீவ் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; மூன்று நியமனங்களைப் பெற்றார். அடுத்த ஆண்டு அவர் நான்கு நியமனங்களைப் பெற்றார்.

வேதியியலுக்கான நோபல் கமிட்டி, ஆவர்த்தன முறையைக் கண்டுபிடித்ததற்காக 1906-க்கான வேதியியலுக்கான நோபல் பரிசை மெண்டலீவுக்கு வழங்குவதற்கு ஸ்வீடிஷ் அகாதெமிக்கு பரிந்துரைத்தது. அவர் ஒரு சர்வதேச உறுப்பினராக அமெரிக்கன் ஃபிலாசபிகல் சொசைட்டியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்வீடிஷ் அகாதெமியின் வேதியியல் பிரிவு இந்தப் பரிந்துரையை ஆதரித்தது. கிட்டத்தட்ட ஒவ்வொரு பரிசுத் தேர்விலும், செய்துள்ளதுபோல, கமிட்டியின் தேர்வை அகாதெமி அங்கீகரிக்க வேண்டும். எதிர்பாராத விதமாக, அகாதெமியின் முழு கூட்டத்தில், நோபல் கமிட்டியின் ஒரு எதிர்ப்பு உறுப்பினர், பீட்டர் கிளாசன், தாம் ஆதரித்த ஹென்றி மொய்சானின் வேட்பை முன்மொழிந்தார். வேதியியலுக்கான நோபல் கமிட்டியின் உறுப்பினர் இல்லாத போதிலும், ஸ்வான்டே அர்ரீனியஸ் அகாதெமியில் பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தார்.  மேலும் மெண்டலீவின் நிராகரிப்புக்கு அழுத்தம் கொடுத்தார். 1906-ஆம் ஆண்டு,  அதன் கண்டுபிடிப்பை அங்கீகரிக்க ஆவர்த்தன முறை மிகவும் பழையது என்று வாதிட்டார். சமகாலத்தவர்களின் கூற்றுப்படி, தனது பிரிப்புக் கோட்பாட்டிற்கு மெண்டலீவ் செய்த விமர்சனத்திற்காக அர்ரீனியஸ் மனக்கசப்பை வைத்திருந்ததால் தூண்டப்பட்டார். சூடான விவாதங்களுக்குப் பிறகு, அகாடமியின் பெரும்பான்மையினர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மொய்சானைத் தேர்ந்தெடுத்தனர். 1907-ஆம் ஆண்டு மெண்டலீவின் இரண்டு நியமனங்கள் மீண்டும் அர்ரீனியஸின் முழுமையான எதிர்ப்பால் தோல்வியடைந்தன. மெண்டலீவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை

 மரணிப்பு

1907-ஆம் ஆண்டு மெண்டலீவ் புனித பீட்டர்ஸ்பர்க்கில் 72 வயதில் இன்ஃபுளுவென்ஸா நோய் தாக்கப்பட்டு  இறந்தார். அவரது கடைசி வார்த்தைகள் அவரது மருத்துவரிடம் இவ்வாறு இருந்தன: "டாக்டர், உங்களுக்கு அறிவியல் இருக்கிறது, எனக்கு நம்பிக்கை இருக்கிறது"

பிற சாதனைகள்

மெண்டலீவ் அறிவியலுக்கு பிற முக்கியமான பங்களிப்புகளைச் செய்தார். ரஷிய வேதியியலாளர் மற்றும் அறிவியல் வரலாற்றாசிரியர் லெவ் சுகேவ் அவரை பின்வருமாறு வகைப்படுத்தினார்

மேதையான ஒரு வேதியியலாளர்.

முதல் தர இயற்பியலாளர்.

நீரியக்கவியல் (ஹைட்ரோடைனமிக்ஸ்), வானிலையியல் (மெட்டியராலஜி), புவியியல், வேதியியல் தொழில்நுட்பத்தின் சில பொருட்கள் (வெடிபொருட்கள், பெட்ரோலியம் மற்றும் எரிபொருட்கள்) மற்றும் வேதியியல் மற்றும் இயற்பியலுடன் தொடர்புடைய பிற துறைகளின் செழுமையான ஆராய்ச்சியாளர்,

வேதியியல் தொழிற்துறை மற்றும் பொதுவாக தொழிற்துறையில் ஆழ்ந்த அறிஞர்.

பொருளாதாரத் துறையில் ஒரு மூல ஆற்றல் கொண்ட சிந்தனையாளர்

மெண்டலீவ் 1868-ஆம் ஆண்டு, ரஷியன் கெமிக்கல் சொசைட்டியின் (Russian Chemical Society [ru]) நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். அவர் காப்புறுதி வணிகக் கொள்கை மற்றும் விவசாயம் குறித்த கோட்பாடு மற்றும் நடைமுறை ஆகியவற்றில் பணியாற்றினார்.

ஈதரின் வேதியியல் கருத்தாக்கத்திற்கான முயற்சியில், ஹைட்ரஜனைவிட குறைந்த அணு எடை கொண்ட இரண்டு மந்த வேதியியல் தனிமங்கள் இருப்பதாக ஒரு கருதுகோளை முன்வைத்தார். இந்த இரண்டு முன்மொழியப்பட்ட தனிமங்களில், இலகுவானது எல்லா இடங்களிலும் ஊடுருவக்கூடிய, எல்லா இடங்களிலும் பரவக்கூடிய வாயுவாகவும், சற்று கனமானது ஒரு முன்மொழியப்பட்ட தனிமமான கரோனியமாகவும் இருக்கும் என்று அவர் நினைத்தார்.

மெண்டலீவ் கரைசல்கள் போன்ற வரையறுக்கப்படாத கலவைகளின் தன்மையை நிர்ணயிப்பதற்கு அதிக ஆய்வைச் செய்து முக்கிய பங்களிப்புகளைச் செய்தார்.

இயற்பியல் வேதியியலின் மற்றொரு துறையில், வெப்பத்துடன் திரவங்களின் விரிவாக்கத்தை ஆராய்ச்சி செய்தார். மேலும் வாயுக்களின் விரிவாக்கத்தின் சீரான தன்மைக்கான கே-லுசாக்கின் விதியைப் போன்ற ஒரு சூத்திரத்தை உருவாக்கினார்.

1861-ஆம்ஆண்டில் திரவம் நீராவியாக மாறும்போது, ஒரு பொருளின் முழுமையான கொதிநிலையை ஒட்டுதலும் ஆவியாதல் வெப்பமும்  பூஜ்ஜியத்திற்குச் சமமாக மாறும் வெப்பநிலை என வரையறுத்து, வாயுக்களின் மாறுநிலை வெப்பநிலை குறித்த தாமஸ் ஆண்ட்ரூஸின் கருத்தை எதிர்பார்த்தார்; அழுத்தம் மற்றும் கன அளவைப் பொருட்படுத்தாமல்.

ரஷியப் பேரரசுக்கு மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்திய பெருமை மெண்டலீவுக்கு வழங்கப்படுகிறது.

அவர் நைட்ரோசெல்லுலோசை அடிப்படையாகக் கொண்ட ஒரு வகை புகை இல்லாத வெடிமருந்தான பைரோகொல்லோடியனைக் கண்டுபிடித்தார்.

இந்தப் பணி ரஷிய கடற்படையால் நியமிக்கப்பட்டது. இருப்பினும் அதன் பயன்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.

1892-ஆம் ஆண்டு,  மெண்டலீவ் அதன் உற்பத்தியை ஒழுங்கமைத்தார்.

மெண்டலீவ் பெட்ரோலியத்தின் தோற்றத்தைப் பற்றி ஆய்வு செய்தார்.

ஹைட்ரோகார்பன்கள் உயிரற்றதாகவும் பூமியின் ஆழத்தில் உருவாகின்றன என்று முடிவு செய்தார். உயிரற்ற பெட்ரோலிய தோற்றத்தைப் பார்க்கவும் அவர் எழுதியது, "கவனிக்க வேண்டிய மூலதன உண்மை என்னவென்றால் பெட்ரோலியம் பூமியின் ஆழத்தில் பிறந்தது. மேலும் அதன் தோற்றத்தை நாம் தேட வேண்டிய இடமும் அங்குதான்"

வேதியியல் அல்லாத நடவடிக்கைகள்

1870களின் முற்பகுதியில் தொடங்கி, ரஷிய தொழிற்துறையின் அம்சங்கள் மற்றும் விவசாய உற்பத்தித்திறனில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களைப் பார்த்து, வேதியியலைத் தாண்டி பரவலாக வெளியிட்டார். அவர் மக்கள்தொகைப் பிரச்சினைகளை ஆராய்ச்சி செய்தார்.

ஆர்க்டிக் கடலின் ஆய்வுகளை ஸ்பான்சர் செய்தார்.

வேதியியல் உரங்களின் செயல்திறனை அளவிட முயற்சித்தார், மற்றும் வணிக கப்பற்படையை ஊக்குவித்தார்.

ரஷிய பெட்ரோலியத் தொழிலை மேம்படுத்துவதில் அவர் குறிப்பாக சுறுசுறுப்பாக இருந்தார்.

பென்சில்வேனியாவின் மேம்பட்ட தொழிலுடன் விரிவான ஒப்பீடுகளைச் செய்தார்.

பொருளாதாரத்தில் நன்கு அடித்தளம் இல்லாதிருந்தாலும், தனது ஐரோப்பிய பயணங்கள் முழுவதும் தொழில்துறையை அவர் கவனித்திருந்தார், மேலும் 1891-ல் ரஷிய குழந்தைத் தொழில்களை வளர்க்கும் நோக்கத்துடன் தற்காலிக சுங்க வரிகளை விதிக்க நிதி அமைச்சகத்தை ஏற்கச் செய்ய உதவினார்.

1889-ல், அவர் மான்செஸ்டர் இலக்கிய மற்றும் தத்துவ சங்கத்தின் கௌரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

அடுத்த ஆண்டு 1890-ல், பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிகிச்சை குறித்த கல்வி அமைச்சகத்தின் அதிகாரிகளுடனான சர்ச்சைக்குப் பிறகு புனித பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் தனது பேராசிரியர் பதவியை ராஜிநாமா செய்தார்.

1892-ல் ரஷ்யாவின் மத்திய நிறைகள் மற்றும் அளவீடுகள் பணியகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்,

அடிப்படை முன்மாதிரிகளையும்  அளவீட்டு நடைமுறைகளையும் தரப்படுத்து  அவர் ஓர் ஆய்வு முறையை அமைத்தார்.

ரஷியாவில் மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்தினார்.

அவர் ஆன்மீவாதத்தின் அறிவியல் கோரிக்கைகளுக்கு எதிராக வாதிட்டார்,

மீவியற்பியல் (மெட்டாஃபிசிக்கல்) கருத்தியல் அறியாமையின் மீறல் தவிர வேறில்லை என்று வாதிட்டார்.

ரஷிய கலாசாரத்தில் ஆன்மீவாதத்தின் பரவலான ஏற்றுக்கொள்ளலையும், அறிவியல் ஆய்வில் அதன் எதிர்மறையான விளைவுகளையும் அவர் வருந்தினார்

வோட்கா கட்டுக்கதை

மெண்டலீவ் வோட்காவின் 40% நிலையான வலிமையை நிர்ணயித்ததற்கு ஒரு மிகவும் பிரபலமான ரஷிய கதை காரணம் கூறுகிறது. எடுத்துக்காட்டாக, ரஷிய ஸ்டாண்டர்ட் வோட்கா விளம்பரப்படுத்துகிறது: "1894-ல், ரஷ்யாவின் மிகப் பெரிய விஞ்ஞானியான டிமிட்ரி மெண்டலீவ், ரஷிய வோட்காவின் ராஜ்ய தரத்தை நிர்ணயிக்கும் ஆணையைப் பெற்றார், அப்போது 'ரஷியன் ஸ்டாண்டர்ட்' பிறந்தது" மற்றவர்கள் "1894-ல் மெண்டலீவின் தலைமையிலான ராயல் அரசு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட உயர்தர ரஷிய வோட்கா" என்று கூறுகின்றனர்.

உண்மையில், 1843-ல் ரஷிய அரசாங்கத்தால் 40% தரநிலை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது, அப்போது மெண்டலீவுக்கு ஒன்பது வயதாக இருந்தது. மெண்டலீவ் 1892-ஆம் ஆண்டு,  புனித பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள நிறைகள் மற்றும் அளவீடுகளின் காப்பகத்தின் தலைவரானார் என்பது உண்மை.

மேலும் அடுத்த ஆண்டு அதை ஒரு அரசு பணியகமாக உருவாக்கினார். ஆனால் அந்த நிறுவனம் ரஷிய வணிக நிறைகள் மற்றும் அளவீட்டு கருவிகளைத் தரப்படுத்துவதற்குப் பொறுப்பாக இருந்தது, எந்த உற்பத்தித் தரத்தையும் நிர்ணயிப்பதில்லை. மேலும், மெண்டலீவின் 1865 முனைவர் பட்ட ஆய்வறிக்கையின் தலைப்பு "ஆல்கஹால் மற்றும் நீரின் கலவை குறித்த உரை" என்பதாகும், ஆனால் அது 70% க்கும் மேற்பட்ட மருத்துவ வலிமை ஆல்கஹால் செறிவுகளைப் பற்றி மட்டுமே விவாதித்தது. மேலும் வோட்கா பற்றி அவர் ஒருபோதும் எதுவும் எழுதவில்லை.

நினைவுக் குறியீடுகள்

பல இடங்கள் மற்றும் பொருள்கள் விஞ்ஞானியின் பெயர் மற்றும் சாதனைகளுடன் தொடர்புடையவை.

புனித பீட்டர்ஸ்பர்க்கில், நடுவண் நிறைகள் மற்றும் அளவீடுகள் அமைப்பின் தலைமையிடமான, துல்லியமான அளவீடுகளுக்கான தேசிய மற்றும் உலகளாவிய தரங்களை நிறுவுதல் ஆதரித்தல் ஆகியவற்றைக் கையாளும் தேசிய அளவீட்டியல் நிறுவனமான டி. ஐ. மெண்டலீவ் மெட்ராலஜி நிறுவனத்திற்கு அவரது பெயர் வழங்கப்பட்டது

அதன் அருகில், அவரது உட்கார்ந்த சிலை மற்றும் அந்த நிறுவனத்தின் சுவரில் அவரது ஆவர்த்தன அட்டவணையின் சித்தரிப்பு ஆகியவற்றைக் கொண்ட அவருக்கான ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.

பன்னிரண்டு கல்லூரிகள் கட்டிடத்தில் , இப்போது புனித பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தின் மையமாகவும், மெண்டலீவின் காலத்தில் - முதன்மை கல்வியியல் நிறுவனமாகவும்- டிமிட்ரி மெண்டலீவின் நினைவு அருங்காட்சியக அடுக்குமாடி குடியிருப்பு அவரது காப்பகங்களுடன் உள்ளது. இவற்றின் முன்னால் உள்ள தெரு அவரது நினைவாக மெண்டலீவ்ஸ்கயா லினியா என்று பெயரிடப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் டி. மெண்டலீவ் பல்கலைக்கழகம் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி ஆஃப் ரஷியா உள்ளது. மெண்டலீவியம், இது Md (முன்னர் Mv) என்னும் குறியீடு மற்றும் அணு எண் 101 கொண்ட ஒரு செயற்கை வேதியியல் தனிமம் ஆகும், இது மெண்டலீவின் பெயரிடப்பட்டது. மெண்டலீவைட்-சி (mendeleevite-Ce) என்னும் கனிமம், 21, 2010-ல் மெண்டலீவின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தொடர்புடைய இனமான மெண்டலீவைட்-நெடியம் (mendeleevite-Nd),16, 2015-ல் விவரிக்கப்பட்டது

சந்திரனின் உள்ள ஒரு பெரிய சந்திரப்  பள்ளம் மெண்டலீவ் விஞ்ஞானியின் பெயரைத் தாங்கியுள்ளது.

ரஷிய அறிவியல் அகாடமி, 1965 முதல் மெண்டலீவ் தங்கப் பதக்கத்தை வழங்கி வருகிறது.

பிப்ரவரி 8, 2016 அன்று, மெண்டலீவின் 182-வது பிறந்த நாள் ஒரு கூகுள் டூடுலுடன் கொண்டாடப்பட்டது.

விதிகளை உடைத்த விஞ்ஞானி

மெண்டலீவ் ஒரு வித்தியாச மனிதன். அரசின் முடிவுகளை எதிர்த்தார். அறிவியல் உண்மை என்றால் அதிகாரத்தையும் எதிர்த்தார். திருமண விதிகளையும் உடைத்தார். நோபல் பரிசு கிடைக்கவில்லை. ஆனால்…இன்று வேதியியல் அவரைத் தவிர்த்து ஒரு வரி கூட எழுத முடியாது. ஒழுங்கு என்பது மனித கண்டுபிடிப்பு அல்ல, மெண்டலீவ் தனிமங்களை உருவாக்கவில்லை. அவர் அவற்றின் உறவைக் கண்டார்.

“ஒழுங்கு என்பது மனிதன் திணிப்பது அல்ல;

இயற்கை சொல்வதை மனிதன் கேட்பது.”

இன்று ஒரு குழந்தை கால அட்டவணையைப் பார்த்தால் அது ஒரு பட்டியல்போல தோன்றும். ஆனால் அதன் பின்னால் ஒரு கனவு, ஒரு தாய், ஒரு தூக்கம், ஒரு துணிச்சல் மறைந்திருக்கிறது.

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]

Dmitri Ivanovich Mendeleev a Russian chemist and creating periodic table

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயிற்சியாளர்கள் இல்லாமல் அறிமுக உலகக் கோப்பையை வசப்படுத்திய இந்தியா!

மதியம் உறக்கம் அதிகம் வருகிறதா? அதீத உடல் சோர்வா? காரணம் இதுதான்!

மகான் - 2 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம்: முதல்வர் ஸ்டாலின்

ஓட்டுக்கு ஒரு லட்சம் அறிவித்தாலும் திமுகவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்: டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT