முகப்பு
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: ஜப்பானில் அனைத்துக் கட்சிக் குழு!

அபரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைக்க அனைத்துக் கட்சிக் குழுவினர் ஜப்பான் சென்றுள்ளனர்.

Updated On : 22 மே 2025, 10:13 pm IST
ஜப்பானிலுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு அனைத்துக் கட்சிக் குழுவினர் மரியாதை செலுத்தினர். - PTI
பகிர்:

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜப்பான் அரசுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சிக் குழுவினர், அந்நாட்டுத் தலைநகர் டோக்கியோவுக்குச் சென்றுள்ளனர்.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளின் மீது இந்தியா அதிரடித் தாக்குதல்களை நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்ட ராணுவ நடவடிக்கையில் அப்பகுதியிலிருந்த பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. மேலும், பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் அரசின் ஈடுபாடு இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து, சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைக்கும் பணியை இந்தியா துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்திய அரசின் சார்பில் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அனைத்துக் கட்சிக் குழுவொன்று ஜப்பான் நாட்டுக்குச் சென்றுள்ளது.

இந்தக் குழுவுக்கு ஜனதா தள எம்.பி. சஞ்சய் ஜா தலைமைத் தாங்கியுள்ளார். மேலும், இந்தக் குழுவில் பாஜக எம்.பி.க்கள் அபரஜிதா சாரங்கி, பிரிஜ்லால், பிரதான் பருவா, ஹேமந்த் ஜோஷி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், அபிஷேக் பானர்ஜி (திரிணாமூல்), ஜான் பிரிட்டாஸ் (மார்க்சிஸ்ட்) மற்றும் முன்னாள் தூதர் மோஹன் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் டோக்கியோ சென்ற அவர்களை அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் வரவேற்றார். பின்னர், அங்குள்ள காந்தி சிலைக்கு இந்தக் குழுவினர் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் டகேஷி இவாய உள்ளிட்ட அந்நாட்டின் முக்கியத் தலைவர்களிடம், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் பயங்கரவாதத் தாக்குதல்களில் தற்காத்துக்கொள்வதற்கான இந்தியாவின் உரிமை குறித்தும் இந்தியப் பிரதிநிதிகள் எடுத்துரைத்தாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, பயங்கரவாதத்துக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச அரங்கில் எடுத்துரைக்க அனைத்துக் கட்சியின் பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்களை 33 நாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மீண்டும் ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் ராகுல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.