பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. 70 வயது முதியவர் கரோனா பாதித்து பலியானது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
85 வயது முதியவர் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல் உறுப்புகள் செயலிழந்து பலியானார். அவருக்கு நடத்திய மருத்துவப் பரிசோதனையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
135 பேருக்கு கரோனா தொற்று பாதித்திருந்தாலும், அதில் 80 பேர் மட்டுமே தற்போது நோய் பாதிப்பில் உள்ளனர். அவர்களில் 73 பேர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள். இதுவரை சுமார் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கர்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், மாநிலத்திலுள்ள மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து, அதிகாரிகள், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர்களுடன் மாநில முதல்வர் சித்தராமையா, திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தார்.
அண்டை மாநிலங்களிலும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கேரளத்தில் 95 பேருக்கும், தமிழகத்தில் 66 பேருக்கும் மகாராஷ்டிரத்தில் 56 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதலே, மாதத்துக்கு ஒன்றிரண்டு கரோனா பாதிப்புகள்தான் ஏற்பட்டு வந்த நிலையில், மே மாதத்தின் நான்காவது வாரத்தில் இது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
கரோனா உதவி எண்களை அறிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விமான நிலையங்களிலும் கரோனா சோதனை மையங்கள் அமைக்கவும், மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் ஊழியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.