டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: மூதாட்டியின் ரூ. 17 லட்சத்தை மீட்ட போலீசார்! எப்படி?
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய மூதாட்டியின் ரூ. 17 லட்சத்தை மீட்ட போலீசார்...
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் மூதாட்டி இழந்த ரூ. 17 லட்சம் பணத்தை மங்களூரு நகர காவல்துறை மீட்டுக் கொடுள்ளது.
சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதுதொடர்பாக உடனடியாக புகார் அளித்தால் இழந்த பணத்தை மீட்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் மங்களூருவில் 79 வயதான பெண்மணி ஒருவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் தனது பணத்தை இழந்த நிலையில் அது மீண்டும் கிடைத்துள்ளது.
கடந்த அக். 23 ஆம் தேதி மங்களூரு பெஜாய் பகுதியைச் சேர்ந்த அந்த மூதாட்டிக்கு ஒரு வாட்ஸ்ஆப் அழைப்பு வந்துள்ளது. காவல்துறை அதிகாரி போல நடித்த அந்த மோசடியாளர், மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றால் பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
சுமார் 5 மணி நேரமாக டிஜிட்டல் அரெஸ்ட்டில் இருந்த மூதாட்டி பிற்பகலில் தனது சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ. 17 லட்சத்தை மோசடி செய்பவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றினார்.
அன்று மாலை 6 மணியளவில், அந்த மூதாட்டி பக்கத்துக்கு வீட்டினரிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்க, பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக 1930 என்ற அவசர எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளும் உடனடியாக விவரங்களைப் பெற்று வங்கி அதிகாரிகளைத்தொடர்புகொண்டு பணப்பரிமாற்றத்தை நிறுத்தினர். மோசடியாளர்களின் வங்கிக் கணக்கை முடக்கினர்.
அக். 24 அன்று முடக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறு போலீசார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி பணம் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் கணக்கிற்கு மாற்றப்பட்டது.
விரைவான புகார் மற்றும் உடனடி நடவடிக்கை முழுத் தொகையையும் திரும்பப் பெற முடிந்தது என்று டிசிபி மிதுன் கூறினார்.
இதுபோன்ற பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் பயம் காரணமாக புகார் செய்ய தாமதம் செய்கிறார்கள். இதனால் பணத்தை மீட்க முடிவதில்லை. ஏமாற்றப்பட்டது உணர்ந்தவுடன் விரைவாக புகார் அளிக்கும்பட்சத்தில் பணத்தை மீட்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
மங்களூரு நகர எல்லையில் மட்டும் இந்த ஆண்டு 8 வெவ்வேறு வழக்குகளில் ரூ. 8 கோடிக்கு மேல் சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. இதுவரை போலீசார் ரூ. 35.98 லட்சத்தை மீட்டுள்ளனர். டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு முதியவர்கள்தான் அதிகம் குறிவைக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.