கம்போடியாவில் டிஜிட்டல் மோசடி கும்பல் பயன்படுத்தி விட்டுச் சென்ற அலுவலகத்துக்குள் சிபிஐ போலி பேனர், மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் புகைப்படங்கள், இந்திய தேசிய கொடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவின் டிஜிட்டல் மோசடி கும்பல் பயன்படுத்தி வந்த அலுவலகத்தின் காட்சிகள் வெளியாகியிருக்கிறது. அதிலிருந்துதான் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் ஏராளமான டிஜிட்டல் மோசடிகளுக்குக் காரணமாக கம்போடியாவிலிருந்து இயங்கும் மோசடிக் கும்பல்கள்தான் காரணம் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக, கம்போடியாவில் இதுபோன்ற மோசடி அலுவலகங்களை அந்நாட்டு அரசு மூடி வருகிறது.
இது குறித்து பேசிய கம்போடியா அமைச்சர் சே சினாரித், 190 இடங்களில் இயங்கி வந்த மோசடி அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
அதுபோன்று சீல் வைக்கப்பட்ட அலுவலகங்களின் விடியோக்களை ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், சிபிஐ அலுவலக பேனர், மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருப்பது வெளியாகியிருக்கிறது.
சீனாவில் பிறந்ததாகக் கூறப்படும் மோசடி மன்னன் பற்றி, அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் இந்த நடவடிக்கை தொடங்கியதாகவும், சீனா அவரை நாடு கடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்வதேச அளவில் நடத்தப்படும் டிஜிட்டல் மோசடிகள் தொடரும் நிலையில், இதுவரை குற்றவியல் வலையமைப்புகளுக்கு எதிராக ஒன்று திரண்டு பல நாடுகளின் கூட்டு சர்வதேச நடவடிக்கைகளில் இது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த நடவடிக்கை தொடங்கியது முதல், பல மோசடி அலுவலகங்களை விட்டு மோசடியாளர்கள் தப்பிச் சென்றிருக்கிறார்கள். மோசமான நிலையில் வைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டவர்கள் கம்போடியாவிலிருந்து நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
கம்போட் என்ற பகுதியில் இருந்த மோசடி அலுவலகம் ஒன்றுக்குள் எடுக்கப்பட்ட விடியோவில், வரிசையாக கணினிகள் உள்ளன. ஒவ்வொரு அறையும் சப்தம் வெளியில் வராத வகையில் உள்ளது. ஒரு அறையில் தாய்லாந்து நாட்டினரை எவ்வாறு பேசி ஏமாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல் பிரிண்ட் எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. ஒரு அறை, இந்திய காவல்நிலையம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த மோசடி மன்னன் லை கோங் கைது செய்யப்பட்டதையடுத்து பல மோசடி கும்பல்கள் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
கம்போட் பகுதியில் வெறும் ஆயிரம்பேர்தான் காவலர்கள் இருக்கிறார்கள். 300 ராணுவத்தினர் உள்ளனர். ஆனால், இப்பகுதியிலிருந்து ஒரே வேளையில் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வெளியேறினார்கள். அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.