அம்பேத்கர் கொள்கையை கடைசி மூச்சுவரை பாதுகாப்பேன்: ராகுல் காந்தி
அம்பேத்கர் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி.
அம்பேத்கரின் கொள்கைகளைப் பாதுகாக்க கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் பிறந்த நாள் விழா இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி அம்பேத்கர் பிறந்த நாளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Advertisement
அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில், ”பாபாசாகேப் டாக்டர். பீமாராவ் அம்பேத்கர் நமக்கு அரசியலமைப்பை மட்டும் வழங்கவில்லை. நீதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் மீது அமைந்த வலிமையான இந்தியா என்ற கனவை அவர் நமக்கு அளித்தார்.
ஆனால், இன்று சில சக்திகள் அம்பேத்கரின் மரபையும் பாரம்பரியத்தையும் பலவீனப்படுத்தத் திட்டமிட்டு செயல்படுகின்றனர். ஜனநாயக அமைப்புகள் உள்ளீடற்றதாக ஆக்கப்படுகின்றன. உரிமைகள் நசுக்கப்படுகின்றன. சமத்துவ சிந்தனை மீது தாக்குதல் நடைபெறுகின்றது.
இந்த நாடு அம்பேத்கரின் கொள்கைகளால் கட்டப்பட்டது. அதனைப் பாதுகாக்க நான் என்னுடைய கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து அம்பேத்கரின் கனவுகளுக்கு உயிர்கொடுப்போம். அம்பேத்கர் ஜெயந்தி நல்வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டுள்ளார்.