தெலங்கானா விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி -மோடி
தெலங்கானா விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்திருப்பது பற்றி...
தெலங்கானாவில் அரசுப் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், தண்டூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி 70 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து, ரங்காரெட்டி மாவட்டம் மிரியால குடா அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி மீது திங்கள்கிழமை காலை மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இதுவரை 24 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து, நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நடந்த விபத்தில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரன நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-ம் நிதியுதவி வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.