ராகுல் குற்றச்சாட்டு 
இந்தியா

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஹரியாணாவில் நடந்திருப்பது வெறும் வாக்குத் திருட்டு மட்டுமல்ல, ஆட்சித் திருட்டு என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏற்கனவே, வாக்குத் திருட்டு மூலம் ஹரியாணாவில் ஆட்சியைப் பிடித்த பாஜக, தற்போது பிகாரிலும் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறது, வாக்குத் திருட்டில் ஈடுபடும் மோடியும், அமித் ஷாவும் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்று ராகுல் கூறினார்.

புது தில்லியில் இன்று வாக்குத் திருட்டு தொடர்பான பல முக்கிய குற்றச்சாட்டுகளை உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டார் ராகுல் காந்தி.

அப்போது அவர் பேசுகையில், வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பாஜகவின் புதிய ஆயுதம். காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தங்கள் வெற்றியாக மாற்றுவதே அவர்கள் நோக்கம்.

ஹரியாணாவில் ஒரே நபரகள் ஒரே வாக்குச் சாவடியில் 18 முறை வாக்களித்திருக்கிறார்கள். சஷாகிரி என்பவர் பதாஸ்பூர் என்ற இடத்தில் 14 முறை வாக்களித்தார். ஒரே நபர் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு அடையாள அட்டைகளை வைத்து பல முறை வாக்களித்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற முறைகேடுகளால்தான் வாக்குச்சவாடி சிசிடிவி காட்சிகளை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

ஒரு வீட்டில் 10க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால், அந்த வீட்டை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதிமுறை. ஆனால், ஹரியாணாவில் ஒரு வீட்டில் 66 பேர், 100 பேர், 500 பேர் என பதிவாகியிருக்கிறது. ஆனால், அங்கு நேரில் சென்று பார்த்தால், அங்கு ஒரே ஒரு அறை மட்டுமே உள்ளது.

ஒரே நபர் உத்தரப்பிரதேசத்திலும் ஹரியாணாவிலும் வாக்களித்துள்ளார். ஒரே ஒரு வீடு, அந்த முகவரியில் 500 வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். வாக்குத் திருட்டில் தேர்தல் ஆணையம் பொய் சொல்கிறது என்று ராகுல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில், முகவரியில் பூஜ்யம் என்று வீட்டு எண் இடம்பெற்றுள்ளது. இது ஏதோ தவறுதலாக நடந்தது அல்ல. அவர்கள் தேர்தல் ஆணையம் சொல்வது போல வீடில்லாமல் சாலையோரம் வாழ்பவர்களும் அல்ல என்று கூறிய ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலில் பூஜ்யம் என இடம்பெற்ற நபரின் வீட்டை புகைப்படத்துடன் காட்டியிருக்கிறார்.

ஒரு வீட்டின் முகவரியில் 500 பேர் இருக்கிறார் என்று கூறிய ராகுல், அந்த வீட்டின் புகைப்படத்தையும் வெளியிட்டு, அதில் இருப்பதாகக் குறிப்பிடும் 500 பேரும் உண்மையில் இருக்கிறார்களா? இல்லையா? இந்த மாநிலத்தில்தான் இருக்கிறார்களா? என ஒருபோதும் உங்களால் உறுதி செய்துகொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கே காண்பிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையம் வழங்கிய தரவுகளிலிருந்துதான் எடுக்கப்பட்டவை. மேலும், அடுத்து பிகாரில் நடைபெறும் தேர்தலுக்குப் பிறகு இதுபோன்ற ஆதாரங்களுடன் மீண்டும் அங்கு நடைபெற்ற வாக்குத் திருட்டு, போலி வாக்காளர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் வெளியிடுவேன் என்று ராகுல் தெரிவித்தார்.

Rahul Gandhi has said that the new weapon to destroy democracy is the Special Radical Amendment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT