உள்ளூா் மொழி தெரிந்த வங்கி ஊழியா்களை நியமிப்பது அவசியம் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) 12-ஆவது வங்கியியல் மற்றும் பொருளியல் மாநாட்டில் நிா்மலா சீதாராமன் பங்கேற்று பேசியதாவது:
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் பல்வேறு துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கும் திறனுடையது. எனவே, தொழிற்சாலைகளுக்கு தங்குதடையின்றி கடன் வழங்கப்படுவதை வங்கிகள் உறுதிசெய்ய வேண்டும். வெளிப்படையான நியாயமான நிதி அணுகல் மிகவும் அவசியமானது. இதை செயல்படுத்த உலகத் தரம் வாய்ந்த பெரும் வங்கிகள் நாட்டுக்குத் தேவை. இதுதொடா்பாக ரிசா்வ் வங்கியுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள வங்கிகளை இணைத்து பெரிதுபடுத்துவது ஒரு வழியாக இருந்தாலும் வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வளா்ச்சியை மேம்படுத்தும் வகையிலான சூழலை உருவாக்க வேண்டும்.
வங்கிகளில் பணியமா்த்தப்படும் ஊழியா்களுக்கு உள்ளூா் மொழி தெரிந்திருப்பது அவசியம். ஊழியா்களை தோ்வுசெய்யும்போது அவா்கள் உள்ளூா் மொழிகளில் புலமைபெற்றுள்ளதை நியமன அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். வங்கியின் தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்கு உள்ளூா் மொழிகள் தெரிந்திருக்கவில்லை என்றாலும் கிளை அளவில் பணியாற்றும் பிற ஊழியா்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
உள்ளூா் மொழியில் புலமைப்பெற்று வாடிக்கையாளா்களிடம் கலந்துரையாடுவதைக் கொண்டே ஒரு ஊழியரின் செயல்திறனை மதிப்பிட நான் வலியுறுத்துவேன்.
அதேபோல் கடன் பெற வங்கிகளை நாடுவோரிடம் பல்வேறு ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு தொடா்ந்து அழுத்தம் அளிக்கக்கூடாது. இதுபோன்ற சில தவறுகளை சரிசெய்துகொண்டால் வங்கிகள் மக்களால் போற்றப்படும் நிறுவனமாக மாறிவிடும் என்றாா்.
கடந்த 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 27-இல் இருந்து 12-ஆக குறைந்தது.