4 நாள்கள் ஆகியும் வாக்குப்பதிவு தரவுகளை ஏன் இன்னும் வெளியிடவில்லை? - தேஜஸ்வி
தேர்தல் ஆணையத்தின் மீதான தேஜஸ்வியின் குற்றச்சாட்டுகள் பற்றி...
பிகாரில் முதல் கட்ட பேரவைத் தேர்தலில் பாலின வாரியாக வாக்குப்பதிவு தரவுகளை தேர்தல் ஆணையம் இன்னும் ஏன் வெளியிடவில்லை? என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிகார் மாநிலத்தில் முதல் கட்ட பேரவைத் தேர்தல் கடந்த நவ. 6 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 65.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.
2 ஆம் கட்ட தேர்தல் நாளை(நவ. 11) நடைபெற உள்ளது.
Advertisement
இந்நிலையில் செய்தியாளர்களுடன் பேசிய தேஜஸ்வி யாதவ், தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
"முதல் கட்டத் தேர்தல் முடிந்து 4 நாள்கள் ஆகியும் அதுதொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடத் தாமதப்படுத்துகிறது. முதல் கட்டத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களின் பாலின வாரியான(ஆண்/ பெண்) தரவை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. முதல்முறையாக இப்படி நடக்கிறது. முன்னதாக தேர்தல் முடிந்தவுடனே இது வெளியிடப்படும்.
பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து பிகாருக்கு 208 போலீஸ் கம்பெனிகள் வந்துள்ளன. இது பிகார் தேர்தலின்போது பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்புகிறது. மேற்குவங்கம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து ஏன் காவல்துறையினர் அழைக்கப்படவில்லை? ஜார்க்கண்ட் மாநிலம் அருகில்தான் உள்ளது, ஏன் அங்கிருந்து போலீசாரை வரவழைக்கவில்லை?
பிரதமர், உள்துறை அமைச்சரின் தலையீட்டால் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை. தேர்தல் செயல்பாட்டில் அவர்கள் தலையிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எந்த சூழ்நிலையிலும் வாக்குத் திருட்டை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் கூறினார்.
RJD Tejashwi Yadav questions poll body, asks why EC didn’t disclose gender-wise data for Phase 1
இதையும் படிக்க | போர் நிறுத்தத்திற்குப் பிறகு எப்படி இருக்கிறது காஸா?