முகப்பு
இந்தியா

தில்லி குண்டுவெடிப்பு! உளவுத் துறை தோல்வி, அமித் ஷா பொறுப்பேற்பாரா? காங்கிரஸ் கேள்வி!

தில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உளவுத் துறை தோல்வியுற்றதாகக் கூறிய காங்கிரஸ், அமித் ஷா பொறுப்பேற்பாரா? என்றும் கேள்வி

Updated On : 14 நவம்பர், 2025 at 8:07 AM
பகிர்:

தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உளவுத் துறை மீண்டும் தோல்வியுற்றதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

தில்லி கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த காங்கிரஸ், மீண்டும் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க மத்திய அமைச்சகம் தவறி விட்டதாகக் கூறியது.

இதுகுறித்த காங்கிரஸின் அறிக்கையில், தேசிய தலைநகரை உலுக்கிய குண்டுவெடிப்பு நடந்த 48 மணிநேரங்களுக்குப் பிறகுதான் இதனை பயங்கரவாதத் தாக்குதல் என்று மத்திய அமைச்சரவை ஒப்புக் கொண்டது. ஒட்டுமொத்த நாடும் முன்பே அறிந்த நிலையில், மத்திய அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் தாமதமானது.

இதனைக் கண்டறிய அரசுக்கு ஏன் இவ்வளவு நேரம் ஆனது மற்றும் மற்றொரு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க அரசு தவறி விட்டது என்பதை மக்கள் அறிய வேண்டும். கடந்த 7 மாதங்களில் இது மற்றொரு பெரிய பயங்கரவாதத் தாக்குதல்,

பஹல்காம் தாக்குதலும் உளவுத் துறையின் தோல்வியாகக் கொள்ளப்படும் நிலையில், அதிலிருந்து அரசு என்ன கற்றுக் கொண்டது? இந்தத் தாக்குதலைத் தடுக்கத் தவறியது ஏன்?

பல பெரிய பயங்கரவாதத் தாக்குதல்கல் நடந்த நிலையில், இவற்றிற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்பாரா?

2015-ல் குர்தாஸ்பூர் தாக்குதல், 2016-ல் பாம்பூர், உரி, நக்ரோட்டா ராணுவத் தளத் தாக்குதல், 2017-ல் அமர்நாத் யாத்திரை தாக்குதல், 2019-ல் புல்வாமா தாக்குதல், 2023-ல் ரஜௌரி தாக்குதல், 2024-ல் ரியாசி தாக்குதல், 2025-ல் பஹல்காம் மற்றும் தற்போது தில்லி செங்கோட்டை. இருப்பினும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொடர்ந்து பதவி வகித்து வருகிறார்.

இந்தத் தவறுகளுக்கு அவர் பொறுப்பேற்பாரா? தொடர்ச்சியான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும்கூட, இதுபோன்ற உளவுத் துறை தோல்விகள் ஏன் தொடர்ந்து நிகழ்கின்றன?

பஹல்காம் தாக்குதல் நடந்து 7 மாதங்களான நிலையில், அதிலிருந்து அரசு என்ன கற்றுக் கொண்டது? கிட்டத்தட்ட 2900 கிலோ வெடிபொருள்கள் கண்டறியப்படாமல், தேசிய தலைநகருக்குள் நுழைந்தது எப்படி? இந்த மாபெரும் தவறுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்ந்து, தில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளிக்க பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையும் படிக்க: காற்று மாசுபாட்டால் கேள்விக்குறியான தில்லி குழந்தைகள் உடல்நிலை!

summary

Delhi car blast: Will Home Minister Amit Shah take responsibility?

முழு கட்டுரையைப் படிக்க →