பிகாரில் நடந்த வாக்குத்திருட்டை விரைவில் அம்பலப்படுத்துவோம்: கே.சி. வேணுகோபால்
பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் கருத்து...
பிகாரில் நடந்த வாக்குத்திருட்டை விரைவில் அம்பலப்படுத்துவோம் என காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார்.
பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் எம்பியும் கட்சியின் பொதுச் செயலாளருமான கே.சி. வேணுகோபால் கூறுகையில்,
Advertisement
Advertisement
"பிகார் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் நம்பமுடியாததாக இருக்கிறது. எங்கள் கூட்டணிக் கட்சிகளும் இந்த முடிவுகளை நம்பவில்லை. இந்த முடிவுகள் எங்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களுக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கவலையளிப்பதாக உள்ளது. இதுகுறித்து ஆராய வேண்டியது அவசியம். நாங்கள் தரவுகளைச் சேகரித்து முழுமையான பகுப்பாய்வை மேற்கொண்டு வருகிறோம். ஓரிரு வாரங்களுக்குள் அது வெளியிடப்படும். தேர்தல் ஆணையம் முற்றிலும் ஒருதலைப்பட்சமானது. இந்த செயல்முறை கேள்விக்குரியது.
பிகாரில் நடந்த வாக்குத்திருட்டை விரைவில் அம்பலப்படுத்துவோம். பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எவ்வாறு வெற்றியைத் திருடியது என்பதற்கான உறுதியான ஆதாரங்களை இன்னும் 2 வாரங்களுக்குள் நாங்கள் வெளியிடுவோம்" என்று கூறியுள்ளார்.
Congress will soon expose votechori in Bihar elections: KC Venugopal
இதையும் படிக்க | வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா?