ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா: குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்பு!
ஆந்திரத்தில் சாய் பாபா நூற்றாண்டு விழாவில் முர்மு கலந்து கொண்டது பற்றி..
ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புட்டபர்த்தியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
ஆந்திரம் மாநிலம், புட்டபர்த்தியில் ஸ்ரீ சய்த சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்து நாள் கொண்டாட்டம் கடந்த நவம்பர் 13-ம் தேதி தொடங்கி வரும் 24-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது. நாடு முழுவதிலும் இருந்து 140 நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வரும் நிலையில், புட்டபர்த்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்தார்.
ட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் விமான நிலையத்திற்கு வந்த அவர், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் பிற பிரமுகர்களால் வரவேற்கப்பட்டார். பின்னர், பூர்ணசந்திரா அரங்கத்தில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் பேசுகையில்,
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா கோடிக்கணக்கான பேர் சேவையில் ஈடுபடுவதற்கு உந்துதலாக இருந்தார். மனிதர்களுக்கு செய்யும் சேவையே கடவுளுக்குச் செய்யும் சேவை என்று அவர் பணியாற்றினார். தன்னலமற்ற சேவையில் ஈடுபடும்படியும், ஆன்மிகத்தை பொது மக்கள் நலனுக்குப் பயன்படும் வகையில் பணியாற்றுமாறும் பக்தர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் அவரது தூண்டுதலால் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகின்றனர் என்பது மகிழ்ச்சியளிக்கின்றது. அவரது போதனைகள் மனிதக் குலத்துக்கு பெரும் உதவியாகவும், வழிகாட்டுதலாகவும் இருக்கும் என்று அவர் பேசினார்.