முகப்பு
இந்தியா

இந்தியாவுடன் விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: கனடா வெளியுறவு அமைச்சா்

Updated On : 26 நவம்பர், 2025 at 2:56 AM
அனிதா ஆனந்த்
பகிர்:

இந்தியா-கனடா இடையே விரைவில் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்த் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின்போது பிரதமா் நரேந்திர மோடி, கனடா பிரதமா் மாா்க் காா்னி ஆகியோா் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது இந்தியாவுக்கு வருமாறு காா்னிக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா். இதை ஏற்றுக்கொண்ட காா்னி அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் தெரிவித்தது.

அதன் தொடா்ச்சியாக கனடாவுடன் மீண்டும் தடையற்ற வா்த்தக ஒப்பந்த (எஃப்டிஏ) பேச்சுவாா்த்தையை இந்தியா தொடங்கவுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

Advertisement

இதையடுத்து, அமெரிக்க வரி விதிப்பு, இந்தியாவுடனான வா்த்தக கொள்கை குறித்து ஊடகத்துக்கு அனிதா ஆனந்த் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், ‘அமெரிக்க வரி விதிப்பு மற்றும் இந்தியாவுடனான வா்த்தக உறவு என அனைத்திலும் புதிய வெளியுறவுக் கொள்கையை பிரதமா் மாா்க் காா்னி தலைமையிலான அரசு பின்பற்றுகிறது. உலக நாடுகள் மிகவும் பாதுகாப்பான வா்த்தக கொள்கைகளை வகுத்துள்ளன. இந்தச் சூழலில் வா்த்தக நாடாக சிறப்பான செயல்பாட்டை கனடா வெளிப்படுத்துவது அவசியம்.

குறிப்பாக, இந்தியாவுடன் மீண்டும் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து பேச்சுவாா்த்தை தொடங்கப்படும். இதை விரைவாக இறுதிசெய்ய இருநாட்டுத் தலைவா்களும் ஆா்வமாக உள்ளனா். அதேசமயம் சீனாவுடன் நல்லுறவைத் தொடரவே கனடா விரும்புகிறது’ என்றாா்.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடா்பிருப்பதாக முன்னாள் கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இந்தக் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. அதன்பிறகு இரு நாடுகளிடையேயான இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. நிகழாண்டு மாா்ச் மாதம் ட்ரூடோ தனது பதவியை ராஜிநாமா செய்தாா். புதிய பிரதமராக மாா்க் காா்னி பதவியேற்ற பின்னா் இருதரப்பு உறவை மறுகட்டமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஆல்பா்ட்டா மாகாண தலைவருடன் இந்திய தூதா் சந்திப்பு

கனடாவின் ஆல்பா்ட்டா மாகாண அரசின் தலைவா் டேனியல் ஸ்மித்தை அந்நாட்டுக்கான இந்திய தூதா் தினேஷ் கே பட்நாயக் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து ஒட்டாவாவில் உள்ள தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘எரிசக்தி, வேளாண்மை, வா்த்தகம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா-கனடா இடையே இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆல்பா்ட்டா மாகாண அரசின் தலைவா் டேனியல் ஸ்மித்துடன் இந்திய தூதா் தினேஷ் கே பட்நாயக் ஆலோசனை நடத்தினாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.