தில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய உமர் நபிக்கு உதவிய ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ஒருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே கடந்த 10 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் கடும் நெரிசலுக்கு மத்தியில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அருகில் இருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. இச்சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா காவல் துறை உதவியுடன் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
குண்டுவெடிப்புக்கு தொடர்புடைய புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முஸாமில் ஷகீல், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த டாக்டர் அதீல் அகமது ராதர், லக்னெளவைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத் உள்பட 6 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணைக் காவலில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், ஹரியாணா மாநிலம், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சோயப் என்ற நபரை என்ஐஏ அதிகாரிகள் புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சோயப், உமர் நபி தங்குவதற்கு அடைக்கலம் அளித்து, அவர் பொருள்களை எடுத்துச் செல்ல போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து காவலில் எடுத்து விசாரிக்க , என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.