முகப்பு
இந்தியா

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப்பத்திரிகையை ஏற்பது குறித்த உத்தரவை டிச. 16-க்கு ஒத்திவைத்தது தில்லி நீதிமன்றம்

நேஷனல் ஹெரால்ட் வழக்கு குற்றப்பத்திரிகையை ஏற்பது குறித்த உத்தரவை டிச. 16-க்கு ஒத்திவைத்தது தில்லி நீதிமன்றம்...

Updated On : 29 நவம்பர், 2025 at 10:28 PM
சோனியா காந்தி - ராகுல் காந்தி - ANI
பகிர்:

நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பான உத்தரவை தில்லி நீதிமன்றம் டிசம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சனிக்கிழமை உத்தரவிட்டது.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா். இதையடுத்து, ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து, அந்தக் கடன் தொகைக்காக ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்ா என்று கண்டறிய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அதனடிப்படையில், தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் உள்ளன. அவா்களின் மேற்பாா்வையில் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

Advertisement

குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவா்களான மோதிலால் வோரா, ஆஸ்காா் ஃபொ்னாண்டஸ், யங் இந்தியன் நிறுவன நிா்வாகிகள் சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்டோா், ஒரு தனியாா் நிறுவனம் மற்றும் யங் இந்தியன் நிறுவனம் மீதும் சதி மற்றும் பண முறைகேடு குற்றச்சாட்டை அமலாக்கத் துறை முன்வைத்தது.

இந்தக் குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பாக தில்லி நீதிமன்றம் தொடா் விசாரணையை மேற்கொண்டது. அமலாக்கத் துறையிடம் சில விளக்கங்களையும் கேட்டது. இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பான உத்தரவை டிசம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments