எஸ்ஐஆர் பணியின்போது மயங்கி விழுந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் பலி!
எஸ்ஐஆர் பணி: வாக்குச்சாவடி நிலை அலுவலர் பலி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் எஸ்ஐஆர் பணியின்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர் மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த 42 வயதான அனுஜ் கார்க், பாரா பகுதியில் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர். இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் தோல்பூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சனிக்கிழமை இரவில் வாக்காளர் பட்டியல் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை தமது வீட்டிலிருந்தபடியே மேற்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தின அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கடந்த சில நாள்களாக கடும் பணிச்சுமைக்கு அவர் ஆளாகியிருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். உடற்கூராய்வுக்குப்பின் அவரது உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
பிகாரைத் தொடா்ந்து, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கோவா, சத்தீஸ்கா், அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.