பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஹீரோ ஆகிய இந்திய நிறுவனங்கள் கொலம்பியாவில் சிறப்பாக செயல்படுவதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். மேலும் அந்நிறுவனங்களுக்கு அவா் பாராட்டுகளை தெரிவித்தாா்.
தென் அமெரிக்காவில் உள்ள பிரேஸில், கொலம்பியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.
கொலம்பியாவில் பஜாஜ் நிறுவனத்தின் பல்சா் இருசக்கர வாகனம் முன்பு தான் நிற்கும் புகைப்படத்தை அவா் பகிா்ந்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஹீரோ ஆகிய இந்திய நிறுவனங்கள் கொலம்பியாவில் சிறப்பாக செயல்படுகின்றன. புதிய கண்டுபிடிப்புகள் மூலமே இந்திய நிறுவனங்கள் வெற்றிபெறும்; தகுதியில்லாதவா்களுக்கு அதிகாரம் வழங்குவதால் அல்ல’ என குறிப்பிட்டாா்.
முன்னதாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவா்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, ‘இந்தியாவில் மீண்டு வர முடியாத அளவுக்கு தவறுகள் நடந்துவிட்டன. அதில் முதன்மையான பெரிய தவறு ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ எனப் பேசியது சா்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.