மகாராஷ்டிர போலீஸாரின் நலனுக்காக முதல்வரிடம் பிரபல நடிகர் கோரிக்கை!
மகாராஷ்டிர காவல் துறையினரின் நலனுக்காக முதல்வரிடம் நடிகர் அக்ஷய் குமார் கோரிக்கை விடுத்துள்ளது குறித்து...
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், காவல் துறையினரின் நலனுக்காக அவர்களது காலணிகளை (ஷூக்களை) மறுவடிவம் செய்ய வேண்டுமென, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடைபெற்ற எஃப்.ஐ.சி.சி.ஐ. மாநாட்டில், பிரபல நடிகர் அக்ஷய் குமார் மற்றும் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், நடிகர் அக்ஷய் குமார் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் ஃபட்னாவீஸ் பதிலளித்தார். அப்போது, மும்பை காவல் துறையினர் அணியும் ஷூக்கள் அவர்களது உடல்நிலை மற்றும் திறனை பாதிக்கும் எனவும், அதனை மறுவடிவம் செய்ய வேண்டுமெனவும் நடிகர் அக்ஷய் குமார் கோரிக்கை விடுத்தார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“நான் கூறுவது திரைத்துறையைச் சார்ந்தது அல்ல. ஆனால், மும்பை காவல் துறையினர் அணியும் காலணிகளை (ஷூக்களை) நான் கவனித்துள்ளேன். அதனுள், ஹீல்ஸ் இருக்கின்றன. அதனோடு, ஓடுவது எளிதல்ல.
அவர்கள் ஓட வேண்டிய சூழ்நிலைகளில், இந்த காலணிகள் முதுகு வலி அல்லது எழும்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை ஒரு தடகள மற்றும் விளையாட்டு வீரராக என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களின், காலணிகளை மறுவடிவம் செய்தால், அது மகாராஷ்டிர காவல் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று அவர் பேசியுள்ளார்.
இதையும் படிக்க: ஆன்லைன் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை மோசடி! இளைஞர்களே இலக்கு!!