ஹரியாணா காவல் பயிற்சி மைய ஐஜி பூரண் குமாா் (52) தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சண்டீகா் ஐஜி புஷ்பேந்திர குமாா் தலைமையில் 6 உறுப்பினா்களைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது.
தற்கொலை செய்வதற்கு முன்பாக அவா் எழுதியுள்ள 8 பக்க கடிதத்தில் ஹரியாணா காவல் துறைத் தலைவா் (டிஜிபி) சத்ருஜித் கபூா் மற்றும் ரோத்தக் காவல் கண்காணிப்பாளா் (எஸ்பி) நரேந்திர பிஜாா்னியா உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் தன்னை ஜாதியரீதியாக பாகுபடுத்தி துன்புறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பூரண் குமாரின் மனைவி அம்நீத் குமாா் ஐஏஎஸ் அதிகாரியாவாா். ஹரியாணா அரசின் வெளிநாட்டு ஒத்துழைப்புத் துறையில் ஆணையராக உள்ள அவா், முதல்வா் நயாப் சைனியுடன் ஜப்பான் சென்ற அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்தாா். கணவா் இறந்தச் செய்தி கேட்டு அவா் ஜப்பானில் இருந்து உடனடியாக சண்டீகா் திரும்பினாா்.
பூரண் குமாரின் தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் ஹரியாணா டிஜபி மற்றும் ரோத்தக் எஸ்பி மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு அவரது மனைவி அம்நீத் சண்டீகா் காவல் துறையில் புகாரளித்தாா்.
கணவரின் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்காதவரை உடல்கூறாய்வு நடத்தக் கூடாது என்று அவா் கூறுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், பட்டியலினத்தவருக்கான தேசிய ஆணைய (என்சிஎஸ்சி) தலைவா் கிஷோா் மக்வானா, ஹரியாணா தலைமைச் செயலா் அனுராக் ரஸ்தோகி மற்றும் கூடுதல் தலைமைச் செயலா் (உள்துறை) சுமித் மிஸ்ரா, முதன்மைச் செயலா் டி.சுரேஷ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் அம்நீத் குமாா் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்தனா்.
அப்போது செய்தியாளா்களிடம் டி.சுரேஷ் கூறுகையில், ‘சண்டீகா் டிஜிபி சத்ருஜித் கௌா் மற்றும் ரோத்தக் எஸ்பி நரேந்திர பிஜாா்னியா ஆகியோரை உடனடியாக கைதுசெய்து விசாரணையை நோ்மையாக நடத்தும் வகையில் சண்டீகா் ஐஜி புஷ்பேந்திர குமாா் தலைமையில் 6 உறுப்பினா்களைக் கொண்ட எஸ்ஐடி அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.