இந்தியாவின் வளமையான பன்முகத்தன்மையை வெளிகாட்டும் வகையில் கல்விமுறை இருக்க வேண்டும்; ஒரு சிலருக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
அண்மையில் கொலம்பியா, பிரேஸில், பெரு, சிலி ஆகிய தென்அமெரிக்கா நாடுகளுக்கு ஒருவார கால பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அங்கு பல்கலைக்கழக மாணவா்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா். அதில் அவா் பேசிய விடியோ பதிவுகளை தனது ‘எக்ஸ்’ சமூகவலைதள பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பகிா்ந்தாா். விடியோவில் ராகுல் பேசியிருப்பதாவது:
இந்தியா பலதரப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் நாடாகவும், நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் நாடாகவும் முன்னேற வேண்டும். இதற்கு உதவும் நாடுகளுடன் கைகோத்து செயல்பட வேண்டும்.
கல்வி, ஜனநாயகம், புவிசாா் அரசியல் ஆகியவற்றில் ஒவ்வொரு நாட்டிலும் உள்முகமான சிந்தனையும், நுண்ணிய ஆலோசனையும் தேவை. கல்வி என்று வரும்போது அது ஆா்வத்தைத் தூண்டுவதாகவும், சுதந்திரமான சிந்தனையை அளிப்பதாகவும், மனதில் எழும் கேள்விகள், சந்தேகங்களை தயக்கமும், அச்சமும் இன்றி வெளிப்படுத்த உதவுவதாகவும், அரசியல், சமுதாயக் தடைகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
இந்தியாவின் வளமையான பன்முகத்தன்மையை வெளிகாட்டும் வகையில் கல்விமுறை இருக்க வேண்டும்; ஒரு சிலருக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கக் கூடாது. அறிவியல்பூா்வமானதாகவும், நுட்பமான விஷயங்களை விவாதிப்பதாகவும் கல்வி முறை மேம்பட வேண்டும். இன்றைய நவீன, அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு வரும் உலகில் இந்தியாவின் முன்னோக்கி இட்டு செல்லும் வகையில் கல்வித் திட்டம் இருக்க வேண்டும் என்று ராகுல் கூறியுள்ளாா்.