முகப்பு
இந்தியா

தகவல் அறியும் உரிமை சட்டம் அமைப்பு ரீதியாக சிதைக்கப்பட்டுவிட்டது! -கார்கே

மோடி அரசு ஜனநாயகத்தையும் குடிமக்களின் உரிமையையும் ஓட்டைபோட்டு விழுங்கியுள்ளது - கார்கே

Updated On : 12 அக்டோபர், 2025 at 11:10 AM
பகிர்:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மோடி அரசு அரித்துவிட்டது என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார்.

கார்கே இன்று(அக். 12) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘20 ஆண்டுகளுக்கு முன், டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் தலைமைத்துவத்தின்கீழ் செயல்பட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஆர்டிஐ எனப்படும் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005’-ஐ அமல்படுத்தியதன் மூலம் வெளிப்படைத்தன்மை மிகுந்த ஒரு சகாப்தத்தில் மத்திய அரசு அடியெடுத்து வைத்தது.

ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசு ஆர்டிஐ சட்டத்தை அமைப்பு ரீதியாக அரித்துவிட்டது. அதன்மூலம், ஜனநாயகத்தையும் குடிமக்களின் உரிமையையும் ஓட்டைபோட்டு விழுங்கியுள்ளது.

2019-இல், தகவல் தொடர்பு ஆணையர்களின் பதவிக்காலம் மற்றும் ஊதிய விவகாரங்கல் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டதன் மூலமாக சுயாட்சி கண்காணிப்பு நிறுவனங்களை அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் நிறுவனங்களாக மாற்றி மோடி அரசு ஆர்டிஐ சட்டத்தை ஹேக் செய்தது.

மின்னணு முறையிலான தனிப்பட்ட தரவு பாதுகாப்புச் சட்டம், 2023-இன் மூலம், இச்சட்டத்தால் ஆர்டிஐ சட்டத்தின் பொதுநல குறிக்கோள் சிதைக்கப்பட்டது. மேலும், ஊழலை மூடிமறைக்கும் ஒர் பாதுகாப்பு கவசமாக ‘தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது’ என்ற பெயரிலான அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது.

மத்திய தகவல் ஆணையரகமானது தலைமை தகவல் ஆணையர் இல்லாமல் இயங்கி வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இப்பதவி 11 ஆண்டுகளில் 7-ஆவது முறையாக காலியாக உள்ளது. இப்போது அங்கு 8 காலியிடங்கள் உள்ளன. அவையனைத்தும் 15 மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன.

‘எந்தத் தரவும் இல்லை’ என்ற அறிவிப்பை இப்போது அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக, கரோனா கால மரணங்கள் உள்ளிட்ட பல முக்கிய பேரிடர்கள் குறித்து அறிய விரும்பினால் இந்த அறிவிப்பே தென்படுகிறது. இதன்மூலம், தரவுகளை அழித்து பொறுப்புத்துறப்பேற்கப் பார்க்கிறது அரசு.

2014முதல், நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டிஐ செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்மூலம், ‘பயங்கரவாதப் பருவகாலம்’ என்பதை அவிழ்த்துவிட்டு, உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்ட முயற்சிப்பவர்களை தண்டிக்கப் பார்க்குமொரு அணுகுமுறை இருப்பதாக கார்கே எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

summary

In the last 11 years, the Modi Govt. has systematically corroded the RTI Act - Mallikarjun Kharge

முழு கட்டுரையைப் படிக்க →