பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில் 1 கோடிக்கும் அதிகமானோர் பயணம்: ரயில்வே அமைச்சர்!
பண்டிகைக் கால சிறப்பு ரயில்களால் பயணிகள் மகிழ்ச்சி: ரயில்வே நடவடிக்கைகளைப் பார்வையிட்ட அமைச்சர்
பண்டிகைக் கால சிறப்பு ரயில்களில் 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் சென்றுள்ளனர் என்று ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்தார்.
தில்லியில் ரயில் நிலையத்துக்குச் சென்ற ரயில்வே துறை அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் பயணிகளுடன் பேசி அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதன் பின், செய்தியாளர்களுடன் பேசிய அவர், “ரயில்வே ஏற்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். பயணிகளுக்காக தீவிரமாக உழைத்து வருகிறோம். பயணிகள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கின்றனர்”.
“பண்டிகைக் காலத்தில் நாடெங்கிலும் பயணிகள் அதிக எண்ணிக்கையில் பயணம் மேற்கொள்கின்றனர். இதுவரை சுமார் 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் சிறப்பு ரயில்களில் சென்றுள்ளனர். தில்லியிலிருந்து மட்டும், ஒருநாளைக்கு சுமார் 4.25 லட்சம் மக்கள் ரயில்களில் செல்கின்றனர்.
இதற்காக, ஒட்டுமொத்த குழுவும் கடுமையாக உழைத்து வருகின்றனர். 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.