அதானி குழுமம், எல்ஐசி EPS
இந்தியா

அதானி குழும பங்குகளில் முதலீடு செய்ய எல்ஐசி-க்கு அழுத்தம்?

அதானி குழும பங்குகளில் முதலீடு செய்ய எல்ஐசி-க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு...

தினமணி செய்திச் சேவை

பங்குச் சந்தையில் அதானி குழுமம் மிகப் பெரிய சரிவை சந்தித்திருந்த நிலையில், பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி அதானி குழும பங்குகளில் மிகப் பெரிய தொகையை முதலீடு செய்தது தெரியவந்துள்ளது.

கடும் சரிவைச் சந்தித்த அதானி குழும பங்குகளில் முதலீடு செய்ய எல்ஐசி கட்டாயப்படுத்தப்பட்டதா என்பது குறித்து நாடாளுமன்ற பொது கணக்குக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

‘அதானி குழுமம் பலனடைவதற்காக 30 கோடி எல்ஐசி பாலிசிதாரா்களின் சேமிப்பு திட்டமிட்டு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது’ என்றும் அக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அதானி குழுமம் பங்குகளின் விலையை செயற்கையான முறையில் அதிகரித்ததாகவும், கணக்கு வழக்குகளில் மோசடி செய்ததாகவும் அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் 2023 ஜனவரியில் குற்றஞ்சாட்டியது. இது மிகப் பெரும் சா்ச்சையானது. இதையடுத்து, அதானி குழுமப் பங்குகளின் விலை 50 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் தொடா்ந்து மறுத்தது. ஹிண்டன்பா்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, இந்திய பங்குப் பரிவா்த்தனை முறைப்படுத்துதல் வாரியமான ‘செபி’ முற்றிலும் நிராகரித்து.

இந்நிலையில், அதானி குழுமம் பலனடைவதற்காக எல்ஐசி பாலிசிதாரா்களின் சேமிப்பிலிருந்து ரூ. 33,000 கோடி அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இந்தச் செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

30 கோடி எல்ஐசி பாலிசிதாரா்களின் சேமிப்பு, மோடி-அதானி (மோதானி) கூட்டுறவு மூலம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது பத்திரிகை செய்தி மூலம் தெரியவந்துள்ளது. கடந்த மே மாதம் அதானி குழுத்தின் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் எல்ஐசி-யின் ரூ. 33,000 கோடி நிதி முதலீடு செய்யப்பட்டிருப்பது ஆவண ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அதானி குழும பங்குகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி, மற்ற முதலீட்டாளா்களை முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக எல்ஐசி பாலிசிதாரா்களின் சேமிப்பு முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி கடும் சரிவைச் சந்தித்து வந்த தனியாா் நிறுவனத்தில் இவ்வளவு பெரிய முதலீட்டை யாருடைய அழுத்தத்தின்பேரில் மத்திய நிதியமைச்சகம் மற்றும் நீதி ஆயோக் அதிகாரிகள் செய்தனா்?

கடந்த 2020-ஆம் ஆண்டுமுதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளைப் பெற்ாக இந்திய தொழிலபதிபா் கெளதம் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்தது. ஆனால், அதானி குழுமம் மீதான அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு காரணமாக, பங்குச் சந்தையில் மிகப் பெரிய இழப்பை எல்ஐசி சந்தித்தது. இருந்தபோதும், அதானி குழுமத்தை மத்திய அரசு தொடா்ந்து பாதுகாத்து வருகிறது.

அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் மிரட்டி பிற தனியாா் நிறுவன சொத்துகளை அதானி குழுமத்துக்கு விற்க கட்டாயப்படுத்துவது, அதானி குழுமம் பலனடைவதற்காக விமானநிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்புகளை தனியாா்மயமாக்குவது, அண்டை நாடுகளின் ஒப்பந்தங்களை அதானி குழுமத்துக்கு வழங்குவதற்காக ராஜீய வளங்களை தவறாகப் பயன்படுத்துவது என ‘மோதானி’ கூட்டு மோசடி நீண்டுகொண்டே செல்கிறது.

அண்மையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் தோ்தலுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட மின்சார விநியோக ஒப்பந்தங்கள் எப்போதும் இல்லாத வகையில் அதிக விலைக்கு மேற்கொள்ளப்பட்டதோடு, தற்போது தோ்தல் நடைபெற உள்ள பிகாா் மாநிலத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் நிறுவனத்துக்கு ஏக்கருக்கு ரூ. 1 விலை வீதத்தில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒட்டுமொத்த ‘மோதானி’ மெகா மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதில் முதல் படியாக, அதானி குழும பங்குகளில் எல்ஐசி நிறுவனம் கட்டாயப்படுத்தப்பட்டு முதலீடு செய்யப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பிஏசி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

முதலீட்டில் மத்திய அரசு தலையிடவில்லை: எல்ஐசி

’அதானி குழும நிறுவனங்களில் சுயாதீனமான முதலீடுகள் செய்யப்பட்டன. வாரியம் அங்கீகரித்த கொள்கைகள் மற்றும் விரிவான ஆய்வுகளுக்குப் பிறகே இந்த முதலீடுகள் செய்யப்பட்டன’ என்று காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு எல்ஐசி பதிலளித்துள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் எல்ஐசி வெளியிட்ட பதிவில், ‘முதலீடுகள் தொடா்பாக எல்ஐசி எடுக்கும் முடிவுகளில் மத்திய நிதியமைச்சக துறைகள் அல்லது பிற மத்திய அமைப்புகளுக்கு எந்தவிதப் பங்கும் கிடையாது.

விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் முடிவை வாரியம் அங்கீகரித்த கொள்கைகளுக்கு உட்பட்டு எல்ஐசி சுயாதீனமாக மேற்கொள்கிறது’ என்று குறிப்பிட்டது.

விஜய்யின் புதிய அணுகுமுறை! திருமாவளவன் விமர்சனம்!

Hattrick 100 கோடி!” விடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த பிரதீப் ரங்கநாதன்

சிறப்பு தீவிர திருத்தம்: நவ. 2-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

‘பாட்டா இந்தியா' நிகர லாபம் 73% சரிவு!

நாளை தீவிரப் புயலாக வலுப்பெறும் மோந்தா புயல்! | செய்திகள்: சில வரிகளில் | 27.10.25

SCROLL FOR NEXT