ரத்த மாற்றம் செய்ததில் மருத்துவர் கவனக்குறைவு: 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு!
ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டது குறித்து...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவரின் கவனக்குறைவால் இச்சம்பவம் நடந்ததால், காரணமாக அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மருத்துவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்திற்கு மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவித்து, குழந்தைகளுக்கு தரமான இலவச சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டத்திற்குட்பட்ட சர்தார் மருத்துவமனையில் மருத்துவரின் அஜாக்கிரதையால் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் குழந்தைகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
தலசீமியா எனப்படும் மரபுவழி மரபணு மாற்றங்களால் ஹீமோகுளோபின் பற்றாக்குறை உடைய 5 குழந்தைகளுக்கு ரத்தமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் செலுத்தப்பட்டதால், குழந்தைகளுக்கும் எச்.ஐ.வி. உறுதி பரவியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பான நிலையில், பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் பதிவிட்டுள்ளதாவது,
''தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்த மாற்றம் செய்ததில், அவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அஜாக்கிரதையாக செயல்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர் உள்பட காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' எனப் பதிவிட்டுள்ளார்.
சர்தார் மருத்துவமனையில் கடந்த மாதம் ரத்த மாற்றம் செய்துகொண்ட தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அக்டோபர் 18ஆம் தேதி எச்.ஐ.வி. இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், குழந்தையின் பெற்றோர் இது தொடர்பாக காவல் துறை ஆணையரகத்தில் புகார் அளித்தனர்.
இந்த விவகாரத்தில் உடனடி விசாரணை நடத்த ஜார்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டு, மருத்துவர் தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவை அமைத்து கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மருத்துவத் துறை இயக்குநர் மருத்துவர் தினேஷ் குமாரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர், அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
ரத்த வங்கியில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் மேலும் 4 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. இருப்பது தெரியவந்தது. இதில் இரண்டு குழந்தைகள் அந்த மருத்துவமனையிலேயே ஐசியூவில் சிகிச்சைப் பெற்று வருகின்றன.
இதையும் படிக்க | பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம், காப்பீடு: தேஜஸ்வியின் தேர்தல் வாக்குறுதிகள்!
Five children test HIV positive after blood transfusion in Jharkhand
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.