தில்லி - பாட்னா இடையே படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத்! முழு விவரம்
தில்லி - பாட்னா இடையே படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது பற்றி,
நாட்டில் இந்திய ரயில்வே தயாரித்துள்ள படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத் ரயில் தீபாவளைய முன்னிட்டு தில்லியிலிருந்து பாட்னா இடையே இயக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக, செப்டம்பர் மாத இறுதியில், படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத் ரயில் இயக்கத்துக்குக் கொண்டு வரப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்கட்டமாக, இந்த ரயில் தில்லி - பிரயாக்ராஜ் வழியாக பாட்னாவுக்கு இயக்கப்பட விருப்பதாகவும், இதன் மூடுலம், தற்போது 12 - 17 மணி நேரமாக இருக்கும் பயண நேரம் 11.5 மணி நேரமாகக் குறைக்கப்படும் என்றும், பயணிகள், ரயில் கட்டணத்தை மட்டுமே செலுத்தி, விமானத்தில் பயணிப்பது போன்ற உணர்வை பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
Advertisement
ஒவ்வொரு நாளும் பாட்னாவிலிருந்து இரவு 8 மணிக்குப் புறப்பட்டு, தில்லியை காலை 7.30 மணிக்கு வந்தடையும் என்றும், இதுபோன்று, தில்லியிலிருந்து புறப்பட்டு பாட்னா செல்லும் என்றும் கூறப்படுகிறது.
வழக்கமாக இதே வழித்தடத்தில் இயக்கப்படும் ராஜ்தானி விரைவு ரயில் டிக்கெட் கட்டணத்தை விட 10 முதல் 15 சதவீதம் கட்டணம் அதிகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடம் எப்போதும் அதிகம் பேர் பயணிக்கும் பாதை என்பதால், இங்கு முதல் வந்தேபாரத் இயக்கப்படவிருக்கிறது.
தற்போது இயக்கப்பட்டு வரும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள், பகல் நேர பயணத்துக்கும், குறைந்த தொலைவு பயணத்துக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது.
ஆனால், தொலைதூர மற்றும் இரவு நேர பயணங்களை எளிதாக்கும் வகையில் இந்திய ரயில்வே படுக்கை வசதிகொண்ட பெட்டிகளைத் தயாரித்துள்ளது.
ஏசி முதல்வகுப்பில் குளியலறை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு என நான்கு சிறப்பு இருக்கைகள், ரயிலில் பயணிக்கும் பயணிகள் ஏதேனும் அவசரம் எனில் ஓட்டுநரைத் தொடா்பு கொள்ளும் வசதி, அனைத்துப் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள், ஏதேனும் பேரிடா் என்றால் பயணிகளுக்கு எச்சரிக்கை விளக்கு, ரயில் முழுவதும் சிசிடிவி கேமரா, கைப்பேசிக்கான யுஎஸ்பி சாா்ஜிங் செய்யும் அமைப்புகளுடன் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், முதல்கட்டமாக 16 ஏசி பெட்டிகள் கொண்டு 10 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்க ரூ.120 கோடி செலவாகும் என்றும், ரயிலின் முதல் வகுப்பில் (ஒரு பெட்டி) 24 பயணிகள், இரண்டாம் வகுப்பில் (4 பெட்டிகள்) 188 பயணிகள், மூன்றாம் வகுப்பில் (11 பெட்டிகள்) 611 பயணிகள் என மொத்தம் 823 போ் பயணிக்க முடியும் என்றும் ரயில்வே அறிவித்திருந்தது.
நாட்டில் முதல் இருக்கை வசதிகொண்ட வந்தே பாரத் 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் துவக்கிவைக்கப்பட்டது.