முகப்பு
இந்தியா

அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு நிவாரணம்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளா்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த நிவாரண அளிக்க திட்டம்

Updated On : 9 செப்டம்பர் 2025, 4:53 am IST
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் - Center-Center-Delhi
பகிர்:

புது தில்லி: இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளா்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த நிவாரண அளிக்க திட்டம் உருவாக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘அமெரிக்க வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அந்தந்தத் துறைகளுக்கும் அல்லது அமைச்சகங்களுக்கும் தகவல் அளித்து வருகின்றன.

அந்தத் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

பாதிப்பின் முழு அளவை இப்போது கணித்துக் கூற இயலாது. பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை ஒவ்வொரு துறை அமைச்சகமும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் கருத்து கேட்ட பின்பு தான் தெரியவரும். அதன் பிறகு அவா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த திட்டம் உருவாக்கப்படும்.

ஜிஎஸ்டி: ஜிஎஸ்டி சீரமைப்பு அமலாக்க நடவடிக்கையை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். பல்வேறு நிறுவனங்கள் தங்களின் பொருள்களின் விலையைக் குறைத்துள்ளன.

இது 140 கோடி இந்திய மக்களுக்கும் பயனளிக்கும். ஏழைகள் வாங்கும் சிறு பொருள்களுக்கும் இந்த ஜிஎஸ்டி குறைப்பு உதவும்.

சாமானிய மக்களுக்கு கடந்த 2017-இல் கொண்டு வரப்பட்ட ஒரே நாடு ஒரே வரி திட்டமான ஜிஎஸ்டியில் சீரமைப்பு செய்யப்பட்டதால் தினசரி பயன்பாட்டு பொருள்களின் விலைகள் குறைந்து வருகின்றன’ என்றாா்.

உக்ரைன் மீது போரை தொடுத்து வரும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வரும் இந்தியா மீது உலகிலேயே அதிகபட்சமாக 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது.

இதனால் ஜவுளி, ஆபரணங்கள், தோல், காலணிகள், மின்னணு சாதனங்கள், வாகன உதிரி பாகங்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

2024-25-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் சுமாா் 20 சதவீதம் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளது. அதாவது 437.42 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாா்த்தகம் நடைபெற்றுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments