ஜம்மு - காஷ்மீர் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை: 2 பேர் சுட்டுக்கொலை!
ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! 3 வீரர்கள் காயம்!
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் காட்டில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் தேடுதல் வேட்டையின்போது 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் இன்று(செப். 8) தெரிவித்துள்ளது. ராணுவத்துடனான துப்பாக்கிச்சண்டையில் கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளின் அடையாளம் தெரியவில்லை. அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குல்காம் மாவட்டத்தில் குட்டர் வனப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படியில், அடர்ந்த வனப்பகுதிகளில் இந்திய ராணுவம், ஜம்மு - காஷ்மீர் போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எஃப் இணைந்து நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டடது. அங்கு பாதுகாப்புப்படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிசூட்டைத் தொடர்ந்து இந்திய ராணுவம் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தது. இந்தச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 வீரர்கள் காயமடைந்தனர். தேடுதல் ஆபரேஷன் தொடர்வதாக அதிகரிகள் தெரிவித்தனர்.